தடாலடியாக ஒரு லட்சம் விசாக்களை ரத்து செய்த அமெரிக்கா! டிரம்ப் தடாலடி! இந்தியர்களுக்கு பெரிய சிக்கல்?
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்தாண்டு விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன. டிரம்ப் ஆட்சியை அமைத்த பிறகு விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கிடையே விசா ரத்து தொடர்பாகச் சில முக்கியமான டேட்டா வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் வந்த உடனேயே அங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தார். முதலில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தோருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு சட்டப்பூர்வமாக விசா எடுத்து வருவோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விசா ரத்து
சிறு சிறு விதிமீறல்களுக்குக் கூட விசா ரத்து செய்யப்பட்டன. முன்பெல்லாம் சிறு விதிமீறல்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்படும். ஆனால், டிரம்ப் வந்த பிறகு எல்லாமே மாறியது. விசா என்பது சலுகை தானே தவிர உரிமை இல்லை.. உரிய ரூல்ஸ்ஸை பின்பற்றவில்லை என்றால் விசாவை ரத்து செய்துவிடுவோம் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருந்தது. இதற்கிடையே 2025ல் ரத்து செய்யப்பட்ட விசா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு லட்சம் விசாக்கள்
அதன்படி அமெரிக்காவில் 2025ஆம் ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்களை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதில் சுமார் 8,000 மாணவர் விசாக்களும் அடங்கும். குற்றச் செயல்களை மேற்கோள் காட்டி, குடிவரவுக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, இந்தச் சமூக விரோதிகளைத் தொடர்ந்து நாடு கடத்துவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை திங்களன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருக்கிறது..
2,500 சிறப்பு விசாக்களும், 8,000 மாணவர் விசாக்களும் உட்பட மொத்தம் ஒரு லட்சம் விசாக்களை ஒரே ஆண்டில் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. தாக்குதல், திருட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்காக இதுபோல விசா ரத்து செய்யப்பட்டு நாடுகடத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தக் குற்றங்களை நிரூபிக்கப்பட வேண்டும் என்று இல்லை.. வெறுமன குற்றஞ்சாட்டப்பட்டாலே அமெரிக்கா நாடு கடத்தி இருக்கிறது.
இரண்டு மடங்கு
ஜோ பைடன் அதிபராக இருந்த கடைசி ஆண்டான 2024ல் மொத்தம் ஒரு லட்சம் விசாக்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டு இருந்தது. அந்த எண்ணிக்கை டிரம்பின் பதவிக் காலத்தில் இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.. விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் இருந்தார்கள் எனச் சொல்லியே அதிகபட்ச விசா ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக தாக்குதல் காரணமாக 30% விசாக்கள், திருட்டு, குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக 20% விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 மாணவர்களின் விசாக்கள் போதைப்பொருள் வைத்திருந்த குற்றங்களுக்காகவும் ரத்து செய்யப்பட்டன..
டிரம்ப் நிர்வாகம்
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிக்காட் கூறுகையில், "அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெளிநாட்டு நபர்களை அகற்றி வருகிறோம். நமது நாட்டைப் பாதுகாக்கவே டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்றார்.
டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோதக் குடியேற்றம் மட்டுமின்றி, சட்டப்பூர்வமான குடியேற்றம் மீதான கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கியுள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்தாண்டும் கூட டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. அதே கெடுபிடிகள் நீடிக்கும் என்றே தெரிகிறது. இதனால் இந்தியர்களும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications