அமெரிக்க கலவரம்... எம்பிகளை கொல்ல திட்டமிட்ட கலவரக்காரர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வாஷிங்டன்: கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறையில் அந்நாட்டு எம்பிகளை கொல்ல கலவரக்காரர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 80க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி... மாஸ் காட்டும் ஜோ பைடன்
மிரட்டல்
இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட ஜேக்கப் சான்ஸ்லி என்பவரைக் கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கலவரத்தின்போது துணை அதிபர் மைக் பென்ஸின் இருப்பிடத்தில் அவரை மிரட்டும் வகையில் ஜேக்கப் சான்ஸ்லி கடிதம் ஒன்றை விட்டுவிட்டுச் சென்றார். அதில், "நேரம் நெருங்குகிறது. நீதி நிலைநாட்டப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது.
கொல்ல திட்டம்
இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "இந்தக் கடிதத்தின் அடிப்படையிலும் பாதுகாப்புப் படையினர் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலும், கலவரக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிடித்துக் கொல்ல திட்டமிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
யார் இந்த ஜேக்கப் சான்ஸ்லி
துணை அதிபர் மைக் பென்ஸுக்கு மிரட்டும் கடிதம் எழுதியிருப்பவர் ஜேக்கப் சான்ஸ்லி. இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க வன்முறையில் ஈடுபட்டார் என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், சான்ஸ்லி போதைப்பொருள் பழக்கம், மன ரீதியான பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரால் சமூகத்திற்கு ஆபத்து என்றும் தெரிவித்தார். கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நாடாளுமன்ற கட்டடத்தில் கொம்புகளை தலையில் மாட்டியவாறு இருப்பவர்தான் ஜேக்கப் சான்ஸ்லி.
நடவடிக்கை
அமெரிக்கக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை அந்நாட்டுக் காவல் துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இந்த போட்டோக்கள், வீடியோக்கள் அடிப்படையிலேயே குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அந்நாட்டுக் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவசர நிலை
மேலும், புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவின் போது மீண்டும் வன்முறை ஏற்படுவதைத் தடுக்க தலைநகர் வாஷிங்டனில் ஜனவரி 21ஆம் தேதி வரை அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக சுமார் 20 ஆயிரம் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.