வரியை சட்டவிரோதம் என அறிவித்த நீதிமன்றம்.. வாங்குன பணத்தை இந்தியாவுக்கு திரும்பி தருவாரா டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விதித்திருந்த வரியை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. வரியை விதிக்க அதிபருக்கு அதிகாரமில்லை, டிரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்நிலையில், சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட வரி இந்தியாவுக்கு திருப்பி தரப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
வாங்கிய வரிக்கு, வட்டி போட்டு.. வட்டிக்கு குட்டி போட்டு மொத்தமாக செட்டில் செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எனவே எப்போது வரியை திருப்பி கொடுப்பார் என்று திருப்பூர் வர்த்தகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அமெரிக்க சட்டம்
'சர்வதேச அவசரக்கால பொருளாதார சட்டம்' என்று அமெரிக்காவில் ஒரு சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தை பயன்படுத்திதான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் வரியை போட்டு, சர்வதேச அளவில் வர்த்தக போரை தொடங்கி வைத்தார். ஆனால், அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து இந்த சட்டத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாது என்று கூறி வந்திருக்கிறது. இது தொடர்பாக வழக்கையும் பதிவு செய்திருக்கிறது.
இந்தியா மீதான வரி
வழக்கு 6 நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெரும்பான்மையான நீதிபதிகள், டிரம்ப் செய்தது சட்டவிரோதம் என்று கூறி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு வந்த நொடியிலிருந்து வரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனால், சும்மா இல்லாத டிரம்ப் மீண்டும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, முதலில் 10% பின்னர் 15% என வரியை போட்டுவிட்டார். இருப்பினும் இந்தியா முன்னர் எதிர்கொண்ட 50% மற்றும் 18% வரியைவிட இது குறைவுதான்.
டிரம்புக்கு எதிராக வழக்கு
எனவே முன்னர் வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி. அமெரிக்க வரி போட்டால் இந்தியா நேரடியாக அந்த வரியை கொடுக்காது. இந்திய பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள்தான் இதற்கான தொகையை கொடுக்கும். எனவே வரியை அமெரிக்க அரசு திருப்பி தருகிறது எனில், அந்த பணம் முதலில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள்தான் போகும்.
இந்தியாவுக்கு பணம் கிடைக்குமா?
இந்த நிறுவனங்கள் ரூ.37,000 கோடி வரை வரியை திரும்ப பெறும். அந்த பணத்தை இந்திய நிறுவனங்கள் வாங்குகிறதா? அல்லது எதிர் வரும் வர்த்தகத்தில் கழித்துக்கொள்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சில வர்த்தகர்கள், குறிப்பாக ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தலைவர் டாக்டர் சக்திவேல் "அமெரிக்க இறக்குமதி நிறுவனங்கள் வரியை திரும்ப பெற்றால், அந்த பணத்தை நாங்கள் கேட்கலாம் என யோசித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
எப்போது கிடைக்கும்?
ஆனால் அமெரிக்க அரசு இந்த வரியை திருப்பி கொடுக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இப்போதைக்கு வரி சட்டவிரோதம் என்று தீர்ப்பு வந்திருந்தாலும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று உத்தரவு வர 5 ஆண்டுகள் வரை வரைக்கூட ஆகலாம். அதுவரை, வழக்கை டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications