“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்!
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கிறது. இந்த கேப்பில், எப்படியாவது ஐரோப்பிய நாடுகளை இந்த பஞ்சாயத்தில் இழுத்துவிட்டுவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசித்திருக்கிறார். இதன் காரணமாக, தற்போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க திட்டத்தை கேட்டிருக்கிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதற்கான விரிவான திட்டங்களை நேட்டோ கூட்டாளிகள் சில நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

வெறும் அறிக்கை மட்டும்
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பதில், ஐரோப்பிய நாடுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, விலைவாசி உயர்ந்து வரும் இந்த நிலையில், வெறும் ஆதரவு அறிக்கைகள் மட்டும் போதாது என்று டிரம்ப் கூறியிருக்கிறார்..
பேச்சுவார்த்தையில் வலியுறுத்தல்
இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பதற்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு, அமெரிக்கா தனது ஐரோப்பிய கூட்டாளிகளைக் கேட்டுக்கொண்டதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் இதனை உறுதி செய்திருக்கிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் தரப்பு, வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
திட்டி திர்த்த டிரம்ப்
இந்த பேச்சுவார்த்தையிலும், டிரம்ப்-நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே இடையிலான சந்திப்பின்போதும் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பதற்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு, நேட்டோவிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், நேட்டோ மற்றும் பிற நட்பு நாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். அழுத்தம் கொடுக்காவிட்டால் அவர்கள் நிலைமையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
கள நிலவரம் என்ன?
முன்னதாக, இங்கிலாந்து தலைமையிலான, சில ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் கனடா உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் டிரம்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கையை வெளியிட்டிருந்தன.
ஆனாலும், கள நிலவரம் இன்னும் நிலையற்றதாகவே இருக்கிறது. 14 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், சண்டைகள் முழுவதுமாக நிற்கவில்லை. லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை ஒப்பந்த மீறலாக ஈரான் குறிப்பிட்டிருக்கிறது. ஜலசந்தி இன்னும் மூடப்பட்டிருப்பதால், வழக்கமான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லை.
போர் நிறுத்தம்
போர்நிறுத்தம் நிலைத்தால், நீரிணை வழியாகக் கப்பல்கள் தடையில்லாமல் மீண்டும் செல்ல வேண்டும் என்பதில் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது. சமீப வாரங்களில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தபோது, பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவிக்கத் தயங்கின. சண்டைகள் நடந்துகொண்டிருந்த வேளையில் ஹோர்முஸ் விவகாரத்தில் தலையிடவும் அவை தயங்கின. இந்த நிலைப்பாடு அமெரிக்காவுக்கும் அதன் நேட்டோ கூட்டாளிகளுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications