டிரம்ப் ஒரே போடு.. "சீனாவுக்கு 155% வரி.." வர்த்தக போரில் இறங்கும் அமெரிக்கா? அடுத்து என்னவாகும்
வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் பதற்றம் டிரம்ப்பின் செயல்பாடுகளால் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 155% வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் உறுதி செய்துள்ளார். சீனாவின் வர்த்தகக் கொள்கை காரணமாகவே இந்த வரிகள் விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதும் தடாலடி நடவடிக்கைக்குப் பெயர் போனவர். அவர் எப்போது என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பார் என்றே பலருக்கும் தெரியாது. இந்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்றவுடனேயே உலகின் பல்வேறு நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அறிவித்திருந்தார். இதனால் உலக வர்த்தகமே பாதிக்கப்பட்டது.

வணிகப் பதற்றம்
அதன் பிறகு அமெரிக்கா ஒரு சில நாடுகளுடன் மட்டும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. அதேநேரம் இந்தியா உட்படப் பல நாடுகளுடன் இன்னும் வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இதனால் வணிகர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இம்மாதத் தொடக்கத்தில் டிரம்ப் இன்னொரு குண்டை வீசியிருந்தார்.
அதாவது சீனா மீது 100%க்கு மேல் வரி விதிக்கப் போகிறேன் என அவர் கூறியிருந்தார். அதற்குப் பதிலடியாகச் சீனாவும் அமெரிக்கக் கப்பல்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்தது. உலகின் இரு பெரும் பொருளாதாரமாக அமெரிக்காவும் சீனாவும் இருக்கும் சூழலில், இரு நாடுகளும் வர்த்தகப் போரில் ஈடுபடுவது சர்வதேச அளவில் பதற்றத்தைக் கிளப்பியது. இதனால் தங்கம் விலையும் கூட எகிறியது.
டிரம்ப் அறிவிப்பு
இதற்கிடையே வரி விதிப்பு தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதியாளராகச் சீனா இருக்கும் சூழலில், அவர்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படுமா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், "நவம்பர் 1 முதல் சீனா மீது சுமார் 155 சதவீத வரி விதிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த வரியை அவர்களால் நீண்ட காலம் சமாளிக்க முடியாது.
சீனாவுடன் நல்லுறவு
நான் சீனாவுடன் நல்லுறவு பேண விரும்புகிறேன். ஆனால் சீனா பல ஆண்டுகளாக நம்மிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது. பிஸ்னஸ் பற்றிப் புரிதல் இல்லாத புத்திசாலித்தனம் இல்லாத அதிபர்கள் நம்மிடம் இருந்ததே இதற்குக் காரணம்.. அவர்கள் சீனாவையும் மற்ற நாடுகளையும் நம்மை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தனர். இதுபோன்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
நான் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்தேன். ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடன் ஒப்பந்தம் செய்தேன். இந்த ஒப்பந்தங்கள் சிறந்த ஒப்பந்தங்கள் தான். இவை அனைத்தும் தேசியப் பாதுகாப்பு தொடர்பானது. வரிகள் காரணமாகவே இதைச் செய்ய முடிந்தது. இதன் மூலம் பல பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிற்கு வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் கடனைக் குறைக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
ரேர் எர்த் மெடல்
இப்போது உலகில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பெரும்பாலான விஷயங்களுக்கு ரேர் எர்த் மெடல் எனப்படும் அரிய வகை உலோகங்கள் தேவைப்படுகிறது. இந்த ரேர் எர்த் மெடல் இப்போது சீனாவிடம் மட்டுமே உள்ளதால் அவர்களையே அனைத்து நாடுகளும் நம்பி இருக்கும் சூழல் இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்காவுக்கு ரேர் எர்த் மெடல் செல்வதில் சீனா சில கட்டுப்பாடுகளை விதித்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஆத்திரமடைந்த டிரம்ப் சீனா மீது வரிகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications