களத்தில் கமலா ஹாரிஸ்.. அமெரிக்க மக்களை கவர சூப்பர் பிளான்.. ஆஹா இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து பைடன் விலகி இருக்கும் நிலையில், கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய கமலா ஹாரிஸ், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எந்த விஷயங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் தரப் போகிறேன் என்பது குறித்துப் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஜனநாயக கட்சி சார்பில் பைடன் அதிபர் வேட்பாளராகத் தேர்வான போதிலும், அவரது உடல்நிலை காரணமாக அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
கமலா ஹாரிஸ்: மேலும், அவர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளருக்காக முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து ஜனநாயக கட்சியின் பல்வேறு தலைவர்களும் கமலா ஹாரிஸை ஆதரித்தனர். இதற்கிடையே தனது முதல் பிரச்சார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறேன் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
முக்கிய இலக்கு: அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தை வலுப்படுத்துவதே தனது முக்கிய இலக்காக இருக்கும் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். மேலும், கருக்கலைப்பு உரிமைகளும் முக்கிய பகுதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "கருக்கலைப்பிற்கான உரிமை பெண்களுடையது. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது பெண்கள் தான்.
எனவே, இந்த உரிமைக்கான போராட்டம் தொடரும். டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால்.. அவர் கருக்கலைப்பு தடுப்பு சட்டத்தில் கையெழுத்திட்டுவிடுவார். அது அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பைச் சட்டவிரோதமாக மாற்றும்" என்றார்.
கருக்கலைப்பு விவகாரம்: அமெரிக்காவில் கடந்த சில காலமாகவே கருக்கலைப்பிற்கான உரிமை என்பது பேசுபொருளாக மாரி இருக்கிறது. அமெரிக்க அரசியலமைப்பு கருக்கலைப்புக்கான உரிமையைப் பாதுகாக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில், அதைக் கடந்த 2022இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பிறகு குடியரசு கட்சியினர் அதிகாரத்தில் இருக்கும் பல்வேறு மாகாணங்களில் கருக்கலைப்பிற்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில மாகாணங்களில் கருக்கலைப்பு முழுமையாகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளன.
பைடன்: இந்த பிரச்சார கூட்டத்தில் அதிபர் ரேஸில் இருந்து விலகிய பைடனும் கலந்து கொண்டார். கொரோனா பாதிப்பால் இப்போது பைடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இதில் காணொலி வாயிலாக kலந்து கொண்டார். அமெரிக்க மக்கள் கமலா ஹாரிஸை அரவணைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அவர் மேலும் பேசுகையில், "கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியினர் பிரச்சாரம் செய்ய வேண்டும். அமெரிக்க மக்கள் கமலா ஹாரிஸை அரவணைக்க வேண்டும். அவர் தான் பெஸ்ட்" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க பைடன் விலகியது முதலே கமலா ஹாரிஸுக்கான நன்கொடை குவிந்து வருகிறது. முதல் 24 மணி நேரத்தில் மட்டும் 81 மில்லியன் டாலர் அதாவது ரூ. 677 கோடி நன்கொடை கமலா ஹாரிஸுக்கு குவிந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் அதிபர் வேட்பாளர் ஒருவருக்கு ஒரே நாளில் இந்தளவுக்கு நன்கொடை குவிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications