உலக போர் தொடங்கிடுச்சா? ரஷ்யா உக்ரைன் போர்.. தீவிரமடையும் தாக்குதல்.. அடுத்து என்ன நடக்கும்!
வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களில் மீண்டும் உச்சத்திற்குச் சென்றுள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் தங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு மேற்குல நாடுகள் அனுமதி அளித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது.
கடந்த சில காலமாக உலகமே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களைத் தான் கவனித்து வந்தது. இந்த காலகட்டத்தில் ரஷ்யா உக்ரைன் மோதலில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது.

ரஷ்யா உக்ரைன் மோதல்: ஆனால், கடந்த சில வாரங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உலகப் போரே தொடங்கும் அளவுக்கு ரஷ்யா- உக்ரைன் மோதல் தீவிரமானதாக மாறியுள்ளது. ஒரு பக்கம் நீண்ட தூரம் சென்று தாக்கும் தங்கள் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் அனுமதி அளித்துள்ளது. இந்த ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தத் தொடங்கிய உடனேயே ரஷ்யா தனது அதிநவீன கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின.
இந்த நீண்ட தூர ஏவுகணைகள் போரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இதற்கு முன்பு வரை ரஷ்யா தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவே மேற்குலக நாடுகளின் ஏவுகணைகளை உக்ரைனால் பயன்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது உக்ரைனால் ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் சென்ற தாக்க முடியும். இது போரின் போக்கையே மொத்தமாக மாற்றிவிடும்.
ஏவுகணைகள்: மேற்குலக நாடுகளின் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான டினிப்ரோ மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கண்டம் பாயும் ஏவுகணை அணு ஆயுதங்களைக் கூட சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும். அங்குப் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், இவ்வளவு சக்திவாய்ந்த ஏவுகணை பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
அடுத்து என்ன நடக்கும்: அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் சமீபத்தில் தான் ரஷ்யா அதிபர் புதின் உடன் பேசியிருந்தார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வலியுறுத்தியிருந்தார். ரஷ்யத் தரப்பு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவே அப்போது கூறியிருந்தது. ஆனால், அதற்கு மாறாகத் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் தான் அதிபராகப் பதவியேற்கப் போகிறார். அதுவரை உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றும் டிரம்ப் உள்ளே வந்த பிறகே பேச்சுவார்த்தையைத் தொடங்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, அதுவரை ரஷ்யாவின் தாக்குதல்களைச் சமாளிக்க உக்ரைனுக்கும் அதிகளவில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் தேவைப்படும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பின்னணி என்ன: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் நிலவி வந்தது. ஆனால், கடந்த 2022இல் இது பெரியளவில் போராக வெடித்தது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அது தங்கள் நாட்டை ஆபத்தில் தள்ளும் என்று ரஷ்யா கருதியது. இதனால் கடந்த 2022 பிப். மாதம் புதின் உத்தரவின் பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது.












Click it and Unblock the Notifications