அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு! 2 பேர் காயம்.. பயங்கரவாத செயல் என டிரம்ப் ஆவேசம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரும் பதிலடி தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். துப்பாக்கி சூட்டிற்கான நோக்கம் குறித்து விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என்று எப்.பிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதியாக வெள்ளை மாளிகை உள்ளது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்து இருப்பதால் 24 மணி நேரமும் நேஷனல் கார்ட் எனப்படும் பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு
எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் வெள்ளை மாளிகையில், சந்தேகத்திற்கிடமாக ஒரு துரும்பு தென்பட்டால் கூட பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைத்து விடுவார்கள் என சொல்லும் அளவிற்கு ஹை-செக்யூரிட்டி நிறைந்த இடமாக உள்ளது. இந்த வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள இடங்களிலும் பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் தான் இருப்பார்கள்.
இந்த நிலையில்தான் வெள்ளை மாளிகை வடமேற்கு பகுதியில் இரண்டு பிளாக்குகள் தொலைவில் உள்ள 17th மற்றும் I பார்க் சதுக்கம் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்கி சந்தேக நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த மோதலில் நேஷனல் கார்டு பாதுகாவலர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். சந்தேக நபரும் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பயங்கரவாத நோக்கத்துடன் நடந்ததா?
அவர் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.. அவரது நோக்கம் என்ன என்பது குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கைத்துப்பாக்கியால் சந்தேக நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சந்தேக நபர் குறித்த முழுமையான விவரங்களை திரட்டி வருவதாகவும், அதன்பிறகே துப்பாக்கிச்சூடு தொடர்பான நோக்கம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெறும்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் இல்லை. டிரம்ப் புளோரிடாவில் உள்ள தனது ரிசார்ட்டிலும், ஜேடி வான்ஸ் கெண்டக்கி மாகாணத்திலும் இருந்தனர். பயங்கரவாத நோக்கத்துடன் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
டிரம்ப் கடும் எச்சரிக்கை
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், கூடுதலாக 500 தேசிய பாதுகாப்பு படை வீரர்களை நிகழ்விடத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மிருகம் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்" எனவும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நபர் சிக்கினார்
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரின் அடையாளத்தை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஹ்மனுல்லா லகன்வால் (வயது 29) என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் இவர் வந்துள்ளார். வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற இந்த தாக்குதல், கொடூரமான தாக்குதல் என்றும் பயங்கரவாத செயல் எனவும் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications