கொரோனாவை விட "கொடூரம்.." அடுத்த பெருந்தொற்று.. உலக சுகாதார அமைப்பிடம் இருந்து வந்த பகீர் வார்னிங்
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு இப்போது தான் சற்றே ஓய்ந்துள்ளது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது அனைவருக்கும் தெரியும். அது ஆய்வகத்தில் தோன்றியதா இல்லை இயற்கையாக மார்கெட்டில் தோன்றியதா என்பதில் இன்னுமே குழப்பம் நிலவி வருகிறது.
இருப்பினும், இந்த கொரோனா வந்தவுடன் கண்ணை மூடி திறப்பதற்குள் 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதனால் உயிரிழப்புகள், நேரம் எனப் பலவற்றை நாம் இழந்துள்ளோம். கொரோனா பாதிப்பு அந்தளவுக்கு மோசமாக இருந்தது.

கோவிட்-19: கொரோனா வேக்சின் கண்டறியப்பட்ட பின்னரே நிலைமை சற்றே மேம்பட்டது. கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னரே தீவிர பாதிப்பும் உயிரிழப்புகளும் வெகுவாக குறைந்தது. அதிலும் வேக்சின் குறித்த அச்சம், போதியளவில் உற்பத்தி இல்லை என்பது போன்ற சிக்கல்கள் இருந்தது. அவை எல்லாம் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்தது.
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இப்போது முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது கொரோனா வைரஸை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் அவர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறையும் நிலையில், அவரிடம் இருந்து வந்த இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆபத்துகள் இருக்கிறது: இது தொடர்பாக அவர் கூறுகையில், "கொரோனா வைரசை சமீபத்தில் சர்வதேச அவசர நிலையில் இருந்து நீக்கினோம். அதற்காக கொரோனா பாதிப்பால் எந்தவொரு ஆபத்தும் இல்லை. இனி இது எந்தவொரு சுகாதார அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று இல்லை.
பாதிப்பு அதிகரித்து அடுத்த அலையை ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் புதிய வேரியண்ட் உருவாக ஆபத்துகள் இருக்கவே செய்கிறது. மேலும் கொடிய ஆற்றலுடன் மற்றொரு நோய்க் கிருமி உருவாகும் அச்சுறுத்தலும் இருக்கவே செய்கிறது.
தொற்று நோய்கள் என்பது நாம் எதிர்கொள்ளும் ஒரே அச்சுறுத்தல்களில் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அனைத்து வகையான பிரச்சினைகளையும் சுகாதார அவசரநிலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலான ஒரு சர்வதேச வழிமுறைகள்தான் நமக்கு இப்போது தேவை.

அடைய வேண்டிய இலக்குகள்: அடுத்த ஒரு பெருந்தொற்று வரும் போது உலக நாடுகள் இணைந்து கூட்டாக வைரஸ் பாதிப்பை எதிர்க்க வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்காக நாம் குறிப்பிட்ட இலக்குகளை 2030க்குள் அடைய வேண்டும். அப்போது தான் அடுத்த பெருந்தொற்றை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
76வது உலக சுகாதார சபையில் அறிக்கையைச் சமர்ப்பித்த டெட்ரோஸ் அதானோம் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த 2017இல் ஒரு பில்லியன் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பைக் கொண்டிருப்பது, ஒரு பில்லியன் மக்கள் சுகாதார அவசர நிலைகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, மேலும் ஒரு பில்லியன் மக்கள் சிறந்த ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பது என்று டிரிபிள் பில்லியன் இலக்கை அறிவித்திருந்தது.
கொரோனா பாதிப்பால் இந்த இலக்குகளை அசைவும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டெட்ரோஸ் அதானோம், இருப்பினும் இந்த இலக்குகளை அடைய நாம் முயல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications