மிரட்டும் கொரோனா.. உலகளவில் தொற்று பாதிப்பு உயர்வு.. டிஸ்சார்ஜ் எண்ணிக்கை மிகவும் குறைவு!
வாஷிங்டன்: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல உயரும் நிலையில், ஒரே நாளில் 8.15 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

கொரோனா பாதிப்பு
இப்போது ஓமிக்ரான் கொரோனா, குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 815,165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 570,531,769 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஒரே நாளில் 111,504 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

எந்த நாடுகள்
உலகளவில் தற்போது அதிக தினசரி கேஸ்களை கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலில் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 113,588 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸில் 89 ஆயிரம் பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
வளர்ந்த வல்லரசு நாடுகளில் வேக்சின் பணிகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. அதேபோல வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளிலும் வேக்சின் பணிகள் வேகமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா உயிரிழப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. உலகளவில் நேற்று ஒரே நாளில் 1694 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 367 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல பிரேசிலில் 351 பேரும் இத்தாலியில் 157 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளது பதிவாகி உள்ளது.

என்ன காரணம்
சில குறிப்பிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு மெல்ல வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கு உருமாறிய ஓமிக்ரான் BA5 வகை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் இது பெரும்பாலும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவம் என்பது ஒரு நல்ல விஷயமாகும்.












Click it and Unblock the Notifications