உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் 6,73,456 பேர் பாதிப்பு - 7,028 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 6,73,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,028 பேர் மரணமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 6,73,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,44,01,771 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகாலமாக 26 கோடி பேரை பாதித்துள்ளது. கொரோனாவில் இருந்து 23,84,39,622 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 52,49,026 பேர் மரணமடைந்துள்ளனர்.
டெல்டா கொரோனாவால் உலகம் முழுவதும் கடும் சிரமத்திற்கு ஆளாகி சற்றே மீண்ட நிலையில் அதை விட வீரியமான ஓமிக்ரான் என்ற கொரோனா தற்போது உலகம் முழுவதும் 30 நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் வகை கொரோனா ஆபத்தானதாக இருக்கலாம் எனவும் இது வேகமாக பரவக்கூடியது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 123,098 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,217 பேர் மரணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரே நாளில் 33,389 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,221 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா வீரியத்துடன் பரவத் தொடங்கியுள்ளது. 53,945 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 48,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 103 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ், இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அரங்கில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் 30வது நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இதுவரை 30 நாடுகளில் 375 பேருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இன்று இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் 46 மற்றும் 66 வயதுடைய இருவருக்கு இந்த கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. ஓமிக்ரான் பாதித்த 46 வயது நபருடன் தொடர்புடைய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், கடந்த நவம்பர் 22ஆம்தேதி முதல் 25ஆம்தேதி வரையில் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்று பெங்களூரு நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன; கடுமையான அறிகுறிகள் இல்லை. ஒமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்; தொற்று உறுதியானால் அடுத்தகட்ட சிகிச்சை, இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஓமிக்ரான் வைரஸ் 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது. ஓமிக்ரான் கொரோனாவை கண்டு அச்சப்படவேண்டாம்.. அதேவேளை விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications