தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க மாஸ் திட்டம்.. கேரள முதல்வரை சந்தித்த தமிழக முதல்வர்.. என்ன நடந்தது?
கேரளா மற்றும் தமிழ்நாடு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
சென்னை: கேரளா மற்றும் தமிழ்நாடு இடையிலான நதிநீர் பங்கீடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையில் நிலவி வந்த காவிரி பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. பல வருடங்களாக நீடித்து வந்த இந்த பிரச்சனை தற்போது நடந்து வரும் அதிமுக ஆட்சியில் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு நீர் பங்கீடு சரியாக செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் காவிரியிலும் தண்ணீர் அடிக்கடி திறந்து விடப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு ஒரே வருடத்தில் இரண்டு முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் கீழ் மேட்டூர் அணை நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கவனத்தை கேரளா பக்கம் திருப்பி உள்ளார். பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் கேரளா உடனான சில நதி நீர் பங்கீட்டு பிரச்சனை மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.
இதற்காக முதல்வர் பழனிசாமி கடந்த 25ம் தேதி கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். கேரளாவில் தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதற்கு முன் இதேபோல் கடந்த 2004-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர்கள் ஜெயலலிதாவும், உம்மன் சாண்டியும் சென்னையில் சந்தித்து பேசினார்கள். அதன்பின் இரு மாநில முதல்வர்களுக்கிடையே நீர் பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக 15 ஆண்டுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் கேரளா முதல்வர் பினராயி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இருமாநில நதிநீர் பங்கீடு தொடர்பான குறிப்பம்சங்களை பினராயி விஜயனிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கேரள நீர் வளத்துறை அமைச்சர் கே. கிருஷ்ணன் குட்டி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி ஜெயராமன், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பரம்பிகுளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்புத் திட்டம் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டது. 1989க்கு பின் பரம்பிகுளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதை புதுப்பிக்க வேண்டும். இதனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.
அதில் பரம்பிகுளம், ஆழியாறு திட்ட ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மதுரையில் வைகை அணைக்கு நீர்வரத்தை அதிகரிக்கும் வகையில் பரம்பிக்குளம் - ஆழியாறு பகுதியில் இரு புதிய அணைகளை கட்ட தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வைகையில் நீர் வரத்து அதிகரிக்கும். மேலும் பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் மூலம் ஆனைமலையார் ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீரை கொண்டு வரவும் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆழியார் பகுதியில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் நீர் திறக்க வேண்டும் என்று கேரளா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
முக்கியமாக பம்பை - அச்சன் கோவில் ஆறுகள் இணைப்பு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. கேரளா வழியாக பாயும் பாண்டியார் - புன்னம்புழா ஆற்றுப் பகுதியில் அணை கட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மிக மிக முக்கியமான பிரச்சனையான முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்தும், அதன் கொள்ளளவு குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது .
இந்த ஆலோசனை கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. இந்த கூட்டத்திற்கு பின் இரு மாநில முதல்வர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் இருமாநில நதி நீர் பங்கீட்டை பேசி தீர்க்க முடிவு செய்து உள்ளோம். முக்கியமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளோம்.
நீர் மின் உற்பத்தி மற்றும் பங்கீடு தொடர்பாகவும் இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்படும். இதற்காக ஒரு வாரத்திற்குள் தலைமைச் செயலாளர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்க உள்ளோம். இந்த குழு ஆலோசனைகளை மேற்கொண்டு பிரச்சனைகளை தீர்க்கும்.
இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நாள் விரைவில் அறிவிக்கப்படும். 6 மாதத்திற்கு ஒருமுறை இரு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். அதே போல, பாண்டியாறு புன்னம்புழா அந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டு அந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும். யானைமலை ஆறு, நீராறு நல்லாறு திட்டம், சிறுவாணி ஆறு பிரச்னைகள் இதன் மூலம் தீர்க்கப்படும்.
தமிழ்நாடு விவசாயிகள் பொதுமக்கள் கேரளாவின் விவசாயிகள் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். நாம் சகோதரர்கள் போல வாழ்கிறோம். நாம் இணைந்து வாழ வேண்டிய நேரமிது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளா மற்றும் தமிழ்நாடு இடையிலான இரு மாநில நதிநீர் பங்கீடு தொடர்பாக அனைத்து விஷயங்களும் பேசப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த நடவடிக்கை மூலம் இரண்டு மாநில நீர் பகிர்வு பிரச்சனையில் பாராட்டத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
RECOMMENDED STORIES