திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் திறப்பு.. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்!
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்ட பின், பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அந்த வகையில் ஏகாதசியான இன்று, பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் வழியாக நுழைந்து இறைவனைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை ஆகும்.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.30 மணிக்கு கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதன்பின் பக்தர்கள் சொர்க்க வாசலில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல் சொர்க்க வாசலில் விதவிதமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலையானின் கற்ப கிரக சன்னதிக்கு ஒட்டியபடி பக்தர்கள் சொர்க்க வாசல் வழியே உள்ளே சென்று உண்டியல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து வெளியே வருகின்றனர். அதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் திருப்பதி கோயிலே ஜொலிக்கிறது.
அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சேலம் கோட்டை பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications