வைகுண்ட ஏகாதசிக்கு டிசம்பர் மாதம் திருப்பதிக்கு போக பிளானா? போக முடியாதே!
திருப்பதி: டிசம்பர் மாதத்தில் வைகுண்ட ஏகாதசியில் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா, அப்படியென்றால் உங்கள் பிளான் நிறைவேறாது. என்ன இது அபசகுணமாக சொல்கிறார்கள் என நினைக்காதீங்க, விஷயம் இருக்கு.
திருப்பதிக்கு உலகமெங்கும் வாழும் இந்திய மக்கள் வந்து செல்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். திருப்பதிக்கு உள்ளூர், வெளிமாநில மக்களும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.

அதிலும் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற போகிறது. புரட்டாசி மாதமும் பிறந்துவிட்டது. எனவே இந்த முறை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதிக்கு முன்பு போல் நினைத்தால் எல்லாம் போக முடியாது.
பெருமாள் அழைத்தால்தான் என்று ஒன்று இருக்கிறது. அதை தாண்டி தற்போது 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும். தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் எனப்படும் நடைபாதை தரிசனம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. தர்ம தரிசனத்திற்கு கூண்டிற்கு அடைந்து கிடக்க விரும்பாவிட்டால் , அதற்கான இலவச டிக்கெட்டை வாங்கிக் கொண்டால் அந்த நேரத்தில் சென்றால் போதும்.
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை இதன் பிறகு பிறக்கும் மார்கழி மாதமும் முக்கியமானது. மார்கழியில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் திருப்பாவை திருவெம்பாவை பாசுரம் ஒலிக்கும். மேலும் மார்கழியில் வைகுண்ட வாசல் திறக்கும். இதனால்தான் மார்கழியில் இறந்தால் நேராக வைகுண்டத்தை அடையலாம் என்கிறார்கள்.
இந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கும். இதை காண பக்தர்கள் குவிவார்கள். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் உள்ளிட்டவைகளில் இந்த விழா கோலாகலமாக நடைபெறும்.
அந்த வகையில் திருப்பதியில் இந்த விழாவை பற்றி கேட்க வேண்டுமா என்ன? திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு 10 நாட்களும் சொர்க்க வாசல் திறந்திருக்கும். இதை காண லட்சோப லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவர்.
அந்த வகையில் டிசம்பர் மாதம் திருப்பதி செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் டிசம்பர் மாதம் திருப்பதிச் செல்ல புக் செய்து கொள்ளலாம். ஆனால் வைகுண்ட ஏகாதசிக்கு செல்ல நினைத்தால் டிசம்பர் மாதம் புக் செய்ய முடியாது.
ஏனென்றால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 ஆம் தேதி வருகிறது. எனவே அக்டோபர் 24 ஆம் தேதிதான் வைகுண்ட ஏகாதசிக்கு டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். கடந்த முறை ஒரே ஆண்டில் இரு முறை வைகுண்ட ஏகாதசி வந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் வைணவர்கள் தாம் வழிபடும் பெருமாளின் கதவுகள் திறக்கும் என நம்புகிறார்கள். இதற்காக முன்னிரவு உறங்காமல் விழித்துக் கொண்டு திருமாலின் புகழ் பாடி கோயிலுக்கு செல்வர். விடியற்காலையில் பெருமாள் கோயில்களில் பொதுவாக வடக்கு திசையில் உள்ள கதவு மூடப்பட்டிருக்கும்.
இந்த கதவு ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும். இந்த வாசல் வழியாக சென்று இறைவனை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது முராசுரனை பெருமாள் வீழ்த்தியது வைகுண்ட வாயில் திறக்கும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications