ஐயப்பன் தங்க அங்கி ஊர்வலம் கோலாகலம்.. கற்பூர ஆழியில் ஜொலித்த சபரிமலை சன்னிதானம்.
சபரிமலை: ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக நேற்று கற்பூர ஆழி பவனி வந்தது. மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.
திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973ஆம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி இன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க அங்கி ஊர்வலம் இன்றைய தினம் சபரிமலைக்கு புறப்பட்டது.

கார்த்திகை, மார்கழி மாத மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி 26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதற்காக பத்தனம்திட்டை ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க அங்கி ஊர்வலம் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துவரப்பட்ட தங்க அங்கிக்கு பக்தர்கள் வழி நெடுகிலும் வரவேற்பு கொடுப்பார்கள். இந்த ரதம் ஓமலூர், முருங்கமங்கலம், பெருநாடு சாஸ்தா கோயில் வழியாக தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில், பத்தனம்திட்டா வழியாக வரும் தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 26 பிற்பகல் 1.30 மணிக்கு பம்பை வந்தடையும்.
பின்னர், அங்கிருந்து தலை சுமையாக தங்க அங்கி, சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து பதினெட்டாம் படி வழியாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கோவில் தந்திரியிடம் ஆபரண பெட்டி ஒப்படைக்கப்படும். இதனைப் பெற்றுக்கொண்ட தந்திரி ஐயப்பனுக்கு தங்க அங்கியை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்வார். தொடர்ந்து சிறப்பான தீபாராதனை நடைபெறும்.
453 சவரன் தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனை காண்பதற்கே கோடி கண்கள் வேண்டும். வரும் 27ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும். இதனை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மண்டல பூஜை நடைபெறும் 27ஆம் தேதி சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்கு முன்னோட்டமாக சபரிமலை சன்னிதானத்தில் நேற்று கற்பூர ஆழி பவனி வந்தது. கொடிமரம் அருகே வட்ட வடிவ பாத்திரத்தில் கற்பூரங்களை குவித்து வைத்து அதில் தந்திரி கண்டரரு ராஜீவரு நெருப்பு வளர்த்தார். தொடர்ந்து பாத்திரத்தின் இரண்டு பக்கமும் கம்பியை பிடித்து இழுத்து அசைத்த போது நெருப்பு மேலே உருண்டு சென்றது.
தொடர்ந்து புலி வாகனத்தில் ஐயப்பன் வேடம் அணிந்த சிறுவன் வலம் வர சிவன், பார்வதி,விஷ்ணு, பிரம்மா, ராமர், சீதை வேடம் அணிந்த பலரும் ஐயப்பனை தொடர்ந்து வந்தனர். அப்போது சன்னிதானத்தில் கூடியிருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று எழுப்பிய சரண கோஷம் சபரிமலை எங்கும் எதிரொலித்தது.
வரும் 27ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.
வழக்கம் போல பகல் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு பின் இரவு 11.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டல பூஜை நிறைவு பெறும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் 30ஆம் தேதி திறக்கப்படும். மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications