அஷ்டதள பாத பத்மாராதனை..ஏழுமலையானை தரிசித்து எடப்பாடி வைத்த மிகப்பெரிய வேண்டுதல்..இப்படி ஒரு விஷேசமா
திருப்பதி: அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பதி ஏழுமலையானை குடும்பத்தோடு தரிசனம் செய்துள்ளார். 'அஷ்டதள பாத பத்மாராதனை' எனப்படும் இந்த ஆர்ஜித சேவையில் பங்கேற்று மிகப்பெரிய வேண்டுதலை வைத்துள்ளார். சிறப்பு வாய்ந்த அந்த சேவை பற்றியும் அதன் சிறப்பம்சம் பற்றியும் பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட்டால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சாதாரண பக்தர்கள் முதல் உலக பணக்காரர்கள் வரை அனைவருமே மணிக்கணக்கில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். தமிழக அரசியல்வாதிகளின் பேவரைட் கடவுள் ஏழுமலையான்.

எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதிக்கு வருகை தருவார். அவரது பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வர உள்ளதாலும் வழக்குகளில் வெற்றி பெற்று பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்துள்ளதாலும் திருப்பதி ஏழுமலையானை விஷேச பூஜை செய்து வழிபட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருப்பதி மலைக்கு காரில் வந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து புஷ்கரணி அருகே உள்ள வராக சாமி கோவில் மற்றும் மாட வீதியில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தார்.

இன்று காலை கோவிலுக்கு சென்று அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனம் செய்த பின்னர் பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து கோவிலுக்கு எதிரில் இருக்கும் அகிலாண்டம் பகுதிக்கு சென்ற அவர் அங்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.
அஷ்டதள பாத பத்மாராதனை எனப்படும் இந்த ஆர்ஜித சேவை சிறப்பு வாய்ந்தது. திருமலையில் 1984ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. ஏழுமலையானின் 108 அஷ்டோத்திரங்களும் உச்சரிக்கப்பட்டு ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு மலர் என வேங்கடவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும்.
புராண இதிகாச காலத்தில் ஆதிசேஷன் கபில மகரிஷியிடம் இந்த அஷ்டதள பாத பூஜையைப் பற்றிக் கூறி இருக்கிறார் என்று கூறுகிறது வெங்கடேஸ்வர மகாத்மியம். பிரம்ம தேவன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்களுடன் மற்றும் தேவதா கணங்களுடன் தேவகங்கையில் பூக்கும் தங்கத்தாமரைப் பூக்களைக்கொண்டு வெங்கடேசப் பெருமாளுக்கு இந்தப் பூஜையை செய்தாராம்.

இதில் மனம் மகிழ்ந்த வெங்கடேசப் பெருமாள், பிரம்ம தேவனுக்கு லோக கல்யாண வரத்தை வழங்கினார். இப்போது இந்த 108 நாமவளி பூஜையை நாம் செய்தால், 16 வகையான ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தங்கத்துக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதாவது அர்ச்சனை செய்ததை மீண்டும் பயன்படுத்தலாம். வில்வத்துக்கும் நிர்மால்ய தோஷம் கிடையாது.
திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்குரிய பூஜையில் 108 தங்கத் தாமரைப் பூக்களை நன்கொடையாக வழங்கியவர் ஒரு இஸ்லாமிய பக்தர். அந்த பக்தர் வைத்த வேண்டுகோளின்படியே செவ்வாய்கிழமைதோறும் 'அஷ்டதள பாதாள சேவை இன்றளவும் நடைபெற்று வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூஜையை செய்து நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க ஏழுமலையானை வேண்டிக்கொண்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications