சித்திரை திருவிழா! நாளை எதிர்சேவைக்காக இன்று அழகர்கோவிலிலிருந்து மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்
மதுரை: சித்திரை திருவிழாவையொட்டி நாளை நடைபெறும் எதிர்சேவைக்காக அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார். அவர் வரும் மே 12 ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்.
திருமாலிருஞ்சசோலை, தென் திருப்பதி என அழைக்கப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் ஆகும்.

இந்த கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. அது போல் மீனாட்சி அம்மன் தேரோட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு என்பது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகும். இதற்காக சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தங்கப்பல்லக்கில் அதிர்வேட்டுகள் முழங்க அழகர் புறப்படுகிறார்.
கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி பட்டுடுத்தி மதுரை வருகிறார். 494 மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கள்ளழகருடன் 39 தள்ளுவண்டி, உண்டியல்களும் மதுரைக்கு வருகின்றன.
நாளை அதிகாலை மூன்று மாவடியில் மதுரை பக்தர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டங்களுடன், எதிர்சேவை செய்து அழகரை வரவேற்கும் நிகழ்வு நடைபெறும். திங்கள்கிழமை அன்று அதிகாலை 5.45 மணிக்கு மேல் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதற்காக நேற்று முதல் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. 13 ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் சேஷ, கருட வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், அன்று இரவு விடிய விடிய தசாவதார கோலங்களில் காட்சி தரும் நிகழ்வும் நடைபெறும். பின்னர் 14 ஆம் தேதி இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும்.












Click it and Unblock the Notifications