Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்திரை திருவிழாவால் திமிலோகப்படும் மதுரை..வைகையில் இறங்க கள்ளழகர் வரார்..அழகர் கோவில் புராணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கள்ளழகர் வைகையில கால் பாதிக்கும் நேரத்திலே..முழு நிலவு ஒளி வீச முகம் எங்கும் மகிழ்ச்சி பூக்க மக்களின் கோவிந்தா கோஷம் மதுரை எங்கும் எதிரொலிக்கும். இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வரப்போகிறார். மதுரையன்ஸ் மனதில் மகிழ்ச்சி பூ பூக்க முகநூல் பக்கத்தில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கள்ளழகர் மதுரைக்கு வரும் முன்பாக அழகர் கோவில் புராணத்தை அறிந்து கொள்வோம்.

மதுரை அழகர்மலை கள்ளழகர் கோயிலில் சித்திரையில் நடந்த பவுர்ணமி திருநாளை, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாசியில் நடந்த திருவிழாவுடன் மன்னர் திருமலை நாயக்கர் இணைத்து, தேனூருக்குப் பதில் மதுரை நகரத்து வைகையில் அழகர் இறங்கும் மாற்றத்தைக் கொண்டு வந்தார். மக்கள் வசதிக்கென செய்யப்பட்ட இம்மாற்றம், சைவத்துடன், வைணவத்தை இணைக்கும் அற்புதத்தைத் தந்துள்ளது.

Kallazhagar will enter Vaigai on 5th May: Chithirai thiruvizha mood on Madurai Azhagarkovil Puranam

மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் தீபாவளி போல கொண்டாட்டம் வர காரணமே மீனாட்சி சொக்கநாதரும் கள்ளழகரும்தான். மீனாட்சி திருக்கல்யாணத்தையும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் உலகமே பார்த்து வியக்கும் வகையில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பதினைந்து நாட்களும் ஊரே திமிலோகப்படும்.

மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

அழகர்கோவில் புராணம்: மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு விரிஷபாத்ரி என்று ஒரு பெயர் உண்டு. தனக்கு கிடைத்த சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். அவரது தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அருள்புரிய வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.

சுந்தரராஜபெருமாள்: கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள். இது எங்கும் இல்லாத சிறப்பு.

அபரஞ்சி: அதே போல மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் உள்ளது.

Kallazhagar will enter Vaigai on 5th May: Chithirai thiruvizha mood on Madurai Azhagarkovil Puranam

சுந்தரராஜபெருமாள்: அழகர்கோயில் கர்ப்பகிரகத்தில் மூலவர் சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சி தருகிறார். தவிர உற்சவர், தியாகபேரர், சுந்தரபாகு, நித்திய உற்சவர் நலந்திகழ் நாராயணன், ஸ்நபனபேரர், ஏறு திருவுடையான் ஆகியோரின் சிலைகளும் கர்ப்பகிரகத்தில் உள்ளன. இது அநேகம் பேருக்குத் தெரியாது. இரண்டாம் பிராகாரத்தில் அக்னி மூலையில் வலம்புரி விநாயகர், தும்பிக்கை ஆழ்வார் என்ற பட்டப்பெயரோடு வீற்றிருக்கிறார். கன்னி மூலையில் சோலைமலை நாச்சியார், வாயுமூலையில் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூமாதேவி, யோகநரசிம்மர் ஆகியோரும் குபேரமூலையில் தேவசேனாதிபதியும் ஈசானிய மூலையில் க்ஷேத்ரபாலகனும் இருக்கிறார்கள். மூன்றாம் பிராகாரத்தில் கருட மண்டபமும், கருடன் சந்நதியும் இருக்கின்றன.

பள்ளியறை: நான்காம் பிராகாரத்தின் அக்னி மூலையில் ஆழ்வார் மற்றும் ஆச்சார்யார்கள் சந்நதி, அதையடுத்து கல்யாண சுந்தரவல்லித் தாயார், சக்கரத்தாழ்வார் சந்நதிகள். சப்த கன்னியரால் ஆராதிக்கப்பட்ட சக்கரத்தாழ்வார் இதற்கு முன் அடிவாரத்தில் தீர்த்த தொட்டிக்குச் செல்லும் வழியில் இருந்தார். பாதுகாப்பு கருதி அவரை இப்போது கோயிலுக்குள் கொண்டு வந்து வைத்து விட்டார்கள். இப்பிராகாரத்தில் பள்ளியறை மண்டபம் உள்ளது. யானைத் தந்தத்தால் ஆன கட்டில் ஒன்றும் உள்ளது. திருமலைநாயக்கர் செய்த கட்டில் இது.

ஆண்டாள்: நான்காம் பிராகாரத்தின் வாயுமூலையில் ஆண்டாள் சந்நதி. இங்கு ஆண்டாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். உற்சவமூர்த்தி திருக்கல்யாண கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ரங்கநாதரை கணவராக அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ஆண்டாள் நூறு அண்டாவில் "அக்கார அடிசில்" செய்து படையல் வைப்பதாக வேண்டிக் கொண்டாராம். இந்த வேண்டுதல் செய்து ஒரு மண்டலம் முடியும் முன்பு ரங்கநாதருடன் ஐக்கியமாகி விடுகிறாள், ஆண்டாள்.

திருமண வரம்: அதனால் சொல்லியபடி அழகருக்கு அக்கார அடிசில் படையலைச் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. பிற்காலத்தில் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, ஆண்டாளின் நேர்த்திக்கடனை ராமானுஜர் செலுத்தியதாக புராணம் சொல்கிறது. ஆண்டாளுக்கு திருமணப்பிராப்தி கிடைத்ததால் இங்கு ஆண்டாள் திருமணக் கோலத்தில் எழுந்தருளி இருப்பதாக ஒரு நம்பிக்கை. ஆண்டாளுக்கு அருகிலேயே மண்டூக மகரிஷி, ஹயக்ரீவர், கிருஷ்ணன்-ருக்மணி-சத்தியபாமா சந்நதிகள். அடுத்து எட்டு கைகளுடன் கூடிய கிருஷ்ணன் சந்நதி. இதையொட்டி சொர்க்கவாசல் கதவும் இருக்கிறது.

நூபுர கங்கை: ஐந்தாம் பிராகாரத்தில் அனுமன், கிருஷ்ணர், ராமர் சந்நதிகள் மற்றும் ஆறாவது பிராகாரத்தில் நந்தவனம். ஏழாம் பிராகாரத்தில் சப்தகன்னிகள் இருக்கிறார்கள். நாராயணவாவி தீர்த்தமும் இங்கே உள்ளது. ஆடி பிரம்மோற்சவத்தின்போது இங்கு தீர்த்தவாரி நடக்கிறது. கோயிலைச் சுற்றிலும் உள்ள பகுதியை அல்லிக்கோட்டை என்று சொல்கிறார்கள். அல்லி ராணியை அர்ச்சுனன் இங்கு காந்தர்வ மணம் செய்து கொண்டதாக ஒரு தகவலுண்டு. அழகர் கோயிலின் மிக முக்கியமான அம்சம் தீர்த்தம்தான். அடிவாரத்திலிருந்து மலை மீது காலார சில கிலோமீட்டர்கள் நடந்தால் தீர்த்தத்தொட்டி வந்துவிடும்.எல்லோரும் புனித நீராடி அழகரையும் வணங்கி செல்வார்கள்.

அபிஷேகம்: அபரஞ்சி எனும் தேவலோகத் தங்கத்தால் ஆன கள்ளழகர் உற்சவருக்கு வேறு தீர்த்தத்தில் அபிஷேகம் செய்தால் அக்கணமே கறுத்துவிடும் என்பதால், இன்றளவும் அழகர்கோயிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில்தான் அபிஷேகம் நடக்கிறது. சித்திரைத் திருவிழாவில் வைகை நோக்கி நகருக்குள் வரும் கள்ளழகருக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் அபிஷேகம் நடக்கும். இன்றும் நூபுர கங்கையிலிருந்தே தலைச்சுமையாக தீர்த்த நீர் மதுரை நகருக்கு கொண்டு வரப்பட்டு இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+