ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம்.. பழனி,திருப்பதியில் பூஜை நேரம் மாற்றம்.. கிரிவலம் செல்லலாமா?
சென்னை: ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களிலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரகணம் நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லலாமா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வாகும். சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரஹஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரஹஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் வரும் 28 ஆம் தேதி நள்ளிரவில் நிகழ உள்ளது.

ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் 28ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் குரு, ராகு, சந்திரன் இணைந்து இருக்கும் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. சந்திரன் மட்டுமல்ல குரு பகவானும் சில மணிநேரங்கள் கிரகணத்தில் பிடியில் சிக்குகிறார். இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் இங்கு தோஷ காலம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிரகணம் நிகழும் நேரத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு கோவில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி 8 மணி நேரத்திற்கு மேல் மூடப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் 28ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29 அன்று மீண்டும் திறக்கப்படும். 29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும். எனவே 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையாம் கோயில் கதவுகள் மூடப்படும்.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவை நடைபெறும். எனவே சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் எட்டு மணி நேரம் மூடப்படும். இதன் காரணமாக 28 ஆம் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடைபெறும். சஷ்டி, மாத கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் நாட்களின்போது பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம். வருகிற 28ஆம்தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும்.
சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களும் சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர் மறுநாள் 29ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி பௌர்ணமியன்று சந்திர கிரகணம் நிகழ்வதால் கிரிவலம் போகலாமா? போகக்கூடாதா? என்று பெரும் குழப்பத்தில் உள்ளனர். கிரகண காலம் முடிந்த பின்பு குளித்து முடித்த பிறகு கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் ஆலய நிர்வாகங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கோவில் நிர்வாகத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நேரத்தில் கிரிவலம் மேற்கொள்ளலாம்.
அக்டோபர் மாதத்திற்கான கிரிவலம் செல்லும் தேதி மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 28 ம் தேதி சனிக்கிழமை பெளர்ணமி வருகிறது. அன்று அதிகாலை 04.01 மணி துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி அதிகாலை 02.27 வரை பெளர்ணமி திதி உள்ளது. பொதுவாக பெளர்ணமி திதியில் கிரிவலத்தை துவங்கி, பிரதமை துவங்குவதற்குள் முடித்து விட வேண்டும் என்பார்கள்.
அக்டோபர் 28 ம் தேதி நாள் முழுவதும் பெளர்ணமி திதி உள்ளதால் அன்று முழுவதுமே கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும். இந்த மாதம் பெளர்ணமி கிரிவலம் சனிக்கிழமையில் வருகிறது. இதனால் பக்தர்கள் அக்டோபர் 28 ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 04.17 மணிக்கு துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01.53 மணிக்குள்ளான நேரத்தில் கிரிவலத்தை நிறைவு செய்து விட வேண்டும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications