பழனி முருகனுக்கு தேனும் தினைமாவும்..வள்ளியின் தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்த குறவர் இன மக்கள்
பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என குறவர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழனி: குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து வழிபட்டுள்ளனர் குறவர் இன மக்கள். பழனி மலை முருகப்பெருமானுக்கு தேனும் தினைமாவும் கூடவே கிழங்கு வகைகளும் கொண்டு வந்து ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தி விட்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி முருகன் கோவிலாகும். தண்டாயுதபாணியை மலையேறி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சமீபத்தில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

12 நாட்கள் தைப்பூசத்திருவிழாவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அதன்படி நேற்றும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர். பின்னர் பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் குறவர் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இது, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று சீர்வரிசை பொருட்களை படைத்து வழிபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்தோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications