50 வருடங்களாக.. கையை மேலே தூக்கியபடி.. நினைத்தே பார்க்க முடியாத கடும் தவம்.. யார் இந்த அமர் பாரதி?
டெல்லி: கடந்த 50 ஆண்டுகளாக தன்னுடைய கையை கீழே இறக்காமல் இறைவனை வேண்டிக்கொண்டிருக்கும் 'அமர் பாரதி' பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நம்மால் ஒரு பத்து நிமிடம் நம்முடைய கையை உயர்த்தி நிறுத்தியிருந்தாலே கை உயிர்போகும் அளவுக்கு வலியெடுக்க தொடங்கிவிடும். இவ்வாறு இருக்க தொடர்ந்து 50 ஆண்டுகள் என்றால்? உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
தற்போது இவரை குறித்தும் இவரை போலவே கடந்த 10 ஆண்டுகளாக தனது கையை கீழிறக்காமல் இறைவனை வேண்டி வரும் மற்றொரு சாமியார் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அமர் பாரதி தெரியுமா?
பண்பாடு மற்றும் கலாச்சார பெருமைகளில் இந்தியா பழமையானது. குறிப்பாக இந்திய மக்கள் பெரும்பாலானோர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில், இறைவனை வேண்டி சுமார் 50 ஆண்டு காலமாக தனது வலது கையை கீழே இறக்காமல் பிரார்த்தனை செய்து வருகிறார் சாது ஒருவர். அமர் பாரதி என்று அழைக்கப்படும் இவர், 1973 வரை இயல்பான இல்லற வாழ்க்கைதான் வாழ்ந்து வந்துள்ளார்.

50 ஆண்டுகள்
ஆனால் அவருக்கு திடீரென இறைவன் மீது தீரா பற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னுடைய வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணிக்க விரும்பியுள்ளார். எனவே அன்று முதல் இறைவனை வேண்டி தனது வலது கையை உயர்த்தி பிடித்துள்ளார். இவ்வாறு செய்ய தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இறைவன் மீதுள்ள பற்று காரணமாக இதை அவர் கைவிடவில்லை. பின்னர் கை மரத்து போக தொடங்கியுள்ளது.

அவரை போலவே
அதன் பின்னர் இவருக்கு வலி சுத்தமாக இல்லை என சொல்கிறார். வலது கையில் அவருக்கு நீண்ட நகங்கள் வளர்ந்துள்ளன. மேலும் விரல்கள் நீளமாக இல்லாமல் ஒரு ஒழுங்கற்ற தன்மையில் இருக்கிறது. தற்போது இவரை போலவே மற்றொரு சாமியார் தன்னுடைய வலது கையை தூக்கி நிறுத்தியவாறு இறைவனை வேண்ட தொடங்கியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னுடைய கைகளுக்கு ரத்த ஓட்டம் தடைப்பட்டு பல ஆண்டுகளாக ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

10 ஆண்டுகளாக
இவர் அமர் பாரதியை போல 50 ஆண்டுகள் கையை உயர்த்தி பிடித்திருக்கவில்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளாக அவர் இப்படியே இருந்திருக்கிறார். எத்தனை ஆண்டுகள் இப்படியே இருக்க போகிறீர்கள் என கேட்டதற்கு, சரியாக தெரியவில்லை என்று பதிலளித்துள்ளார். தற்போது இவர் பேட்டியளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சாதுக்களின் இந்த விநோதமான வழிபாடு குறித்து மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications