திருவண்ணாமலை தீபத்திருநாள்... நாளை மகா தேரோட்டம்.. மகாதீபம் நாளில் மலை ஏற நிபந்தனைகள்
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவின் ஏழாம் நாளான நாளைய தினம் மகா தேரோட்டம் நடைபெற உள்ளதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்படுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 26ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நாளில்
மலை மீது ஏறி மகாதீபத்தை வழிபட நினைப்பவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: சிவமே மலையாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். நினைத்தாலே முக்தி தரும் தலமான இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் தீபத்திருநாள் பத்துநாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தீப திருநாள் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகா தேரோட்டம்: தினசரியும் பஞ்ச மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் 7-ம் நாள் உற்சவமான நாளைய தினம் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது. ஒரே நாளில் 5 தேர்கள், மாட வீதியில் பவனி வருவதைக் காண கண் கோடி வேண்டும். முதலில் விநாயகர் தேர் புறப்பட்டுச் சென்று நிலைக்கு வந்ததும், வள்ளி, தெய்வானை சமேதமுருகரின் தேர் புறப்பட்டு செல்லும்.
லட்சக்கணக்கான பக்தர்கள்: இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருள, பெரியத் தேர் என பக்தர்களால் அழைக்கப்படும் மகாதேர் புறப்பட்டு மாட வீதியில் வலம் வரும். இதையடுத்து, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், அடுத்ததாக சண்டிகேஸ்வரர் தேர் புறப்பட்டு செல்லும். காலையில் தொடங்கும்மகா தேரோட்டம் இரவு வரை நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரோகரா: மகா தேரோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, பஞ்ச ரதங்களுக்கு கலசம் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களுக்கும் கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக, கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடை பெற்றது. கலசம் பொருத்தப்பட்டபோது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர்.
பரணி தீபம்: இதனிடையே வரும் 26ஆம் தேதியன்று அதிகாலையில் அண்ணாமலையார் கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. பரணி தீபத்தை தரிசனம் செய்ய 4000 பக்தர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல
கார்த்திகை தீபத்திருநாள் மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2500 பக்தர்களுக்கு அனுமதி: மலை ஏறும் பக்தர்கள் தங்கள் அடையாள அட்டை ஆதார் கார்டுடன் வந்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 26 ஆம் தேதி அன்று காலை 5 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும். குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி கிரிவலம்: திருக்கார்த்திகை தீப திருநாள், பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இலவச மினி பஸ்கள்: மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications