Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் மாசி திருவிழா 25ல் கொடியேற்றம்..தேரோட்டம் எப்போது? - முழு விபரம் இதோ

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா இம்மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழா மார்ச் 6ஆம் தேதி மாசி மகம் தேரோட்டம் நடைபெற உள்ளது.

Tiruchendur Masi Festival begins with flag hoisting on 25th February 2023

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் சுவாமி அம்பாள் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மாசி மாதம் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளில் தேரோட்டம் நடைபெறும்.

"கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே" என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.

மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

26ஆம் தேதி 2ஆம் திருவிழாவான அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் புறப்பாடு நடக்கிறது. தினந்தோறும் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளுவார்.

மூன்றாம் நாள் திருவிழாவாக காலை சுப்ரமணியர் பூங்கோயில் சப்பரத்திலும் அம்பாள் கேடயத்திலும் உலா வருகிறார். பின்னர் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இரவு சுவாமி தங்கக் கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா வருகிறார்.

4ஆம் நாள் திருவிழாவாக காலை முருகன் வெள்ளி யானை சப்பரத்திலும் அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் பவனி வருகிறார். 5ம் நாள் திருவிழாவாக மெல்லகோவில் குடவரவாயில் தீபாரதனையும் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருவார்கள்.

6ஆம் நாள் திருவிழாவாக முருகன் கோ ரதத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பந்தல் மண்டபம் சேர்கிறார். இரவு அம்மன் வெள்ளித் தேரில் இந்திர விமானத்திலும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது.

ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார். அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி தருகிறார்.

எட்டாம் திருவிழா நாளன்று காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி வலம் வருகிறார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வருகிறார். பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார்.

"காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபடுவார்கள். இதனால் நகரின் ரத வீதிகளில் பன்னீர் வாசனையை நாள் முழுவதும் பக்தர்கள் உணர முடியும்.

ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருவிழா மார்ச் 6ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அன்று காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

11ஆம் திருவிழாவான 7ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ம் தேதி சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கார்த்திக், நிர்வாகிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+