காலி மனையை வாங்குவோர், சொந்த வீடு வாங்க நிலம் வாங்குபவர்கள் இதைதான் கவனிக்கணும்.. இதோ சுப சகுனங்கள்
சென்னை: எப்போதுமே வீடு கட்டும்போது வாஸ்து பார்த்து கட்ட வேண்டும்.. பஞ்சபூதங்களான காற்று, நீர், நெருப்பு, பூமி., வானம் போன்றவை அனைத்துமே சமநிலையில் இருக்கும்போது, அந்த வீட்டில் அனைத்து செல்வங்களும் தங்கியிருக்கும் என்பது பெருத்த நம்பிக்கையாகவே இருந்து வருகிறது.. சொந்த வீடு வாங்க வேண்டுமானால் எந்தெந்த ராசியினர் எந்தெந்த கடவுளை வணங்கலாம்? காலி மனை வாங்க செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பெரும்பாலானோருக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய வாழ்நாள் கனவாகும்.. இந்த கனவை நனவாக்க பலரும் வாழ்நாளின் பெரும்பகுதியை தொலைக்கிறார்கள்.. இதில் நிறைய பேருக்கு சொந்த வீடு கனவானது, வெறும் கனவாகவே போய்விடுகிறது.

சொந்த வீடு ராசி யாருக்கு அமையும்
4ம் வீட்டு அதிபதி அல்லது செவ்வாய் அதிக பலம் நிறைந்திருந்தால், அவர்களுக்கு சொந்த வீடு மனை பாக்கியம் கிடைக்கும் என்பார்கள்.. 4ம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால், அவரது பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்கக்கூட முடியாத சூழல் ஏற்படும்.. அல்லது அந்த வீடு நீண்ட நாளைக்கு கைக்கு எட்டாமலேயே போய்விடும் என்பார்கள்.
எனவே, சொந்த வீடு ஒருவருக்கு நிரந்தரமாக அமைய வேண்டுமானால், முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தால போதும்.. நவகிரகங்களில் செவ்வாய்க்கிரகத்துக்கு "பூமிகாரகன்" என்ற சிறப்பு பெயர் உள்ளதாலும், செவ்வாயினுடைய அதிதேவதை முருகன் என்பதாலும், சொந்த வீடு மனை வேண்டும் விரும்புபவர்கள் எந்த ராசியாக இருந்தாலும் முருகனை வணங்கி வரலாம்.
வீடு வாங்க வணங்க வேண்டிய கடவுள்
எனினும், வீடு வாங்க, ஒவ்வொரு ராசியினரும், ஒவ்வொரு கடவுளை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும்.. அந்தவகையில், மேஷ ராசியினர் அம்பாளையும், ரிஷப ராசியினர் சிவபெருமானையும், மிதுன ராசியினர் மகாவிஷ்ணுவையும், கடக ராசியினர் அம்பாளையும், சிம்ம ராசியினர் முருகப்பெருமானையும் வணங்கி வரலாம்.
அதேபோல கன்னி ராசியினர் காவல் தெய்வங்கள், சித்தர்களையும், துலாம் ராசியினர் விநாயக பெருமானையும், விருச்சிக ராசியினர் பைரவர், காவல் தெய்வங்களையும், தனுசு ராசியினர் முருகப்பெருமானையும், மகர ராசியினர் அம்பாளையும், கும்ப ராசியினர் குலதெய்வம், காவல் தெய்வங்களையும், மீன ராசியினர் மகாவிஷ்ணுவையும் வணங்கி வருவதால் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும்.
காலி மனை வாங்க போனால்
அதேபோல சொந்த வீடு கட்டுவதற்கு காலி மனை வாங்க நேரிடும்போது, சில சகுனங்களை கவனித்து பார்க்க வேண்டுமாம்.. காலி வாங்க போகும்போது, நாதஸ்வர இசை ஒலிப்பது, கோவில் மணி ஓசை கேட்பது, மணமக்கள் எதிரே வருவது, திருமணப் பெண்ணை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி, கோயிலில் பூஜைகள் நடப்பது போன்ற சகுனங்கள் தென்பட்டால், உங்களது மனை நன்றாக அமையுமாம்.
சுப சகுனங்கள் - சிறப்பாக வாழ்க்கை
அதேபோல, பசுமாடு எதிரில் வருவது, தம்பதிகள் ஜோடியாக எதிரே வருவது, நாய்க்குட்டிகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவது, பூஜை பொருட்கள், குழந்தை பிறந்த செய்தியை கேட்பது, சுத்தமான துணியை ஒருவர் எதிரே கொண்டு வருவது, தெய்வ விக்கிரகங்கள் திருவீதி உலா, பிரசவம்முடிந்து தாயும், சேயும் வீட்டுக்குள் நுழைவது, கிரகப்பிரவேச வீடு, திருமணம் நடப்பது, இறந்தவரது இறுதி ஊர்வலம் போன்றவை அனைத்துமே சுப சகுனங்களாகவே பார்க்கப்படுகின்றன..
இநத் சகுனங்களில் ஏதாவது ஒன்று உங்கள் கண்ணில் தென்பட்டால், நீங்கள் பார்க்க செல்லும் காலி மனை சிறப்பாக அமைந்து, கட்டுமான பணிகளையும் விரைவில் மேற்கொண்டு, மங்களகரமாக வாழ்க்கை அந்த வீட்டில் நடக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications