Maha Shivratri 2025: மகா சிவராத்திரிக்கு பக்தர்கள் ஏன் கண் விழிக்கிறார்கள்? விரதமுறை என்ன தெரியுமா?
சென்னை: மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் மகா சிவராத்திரி எப்போது வருகிறது, விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் தீபா தங்கராசு என்பவர் கூறியிருப்பதாவது: மகா சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் தெரியுமா? புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.

சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.
தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.
சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு அற்புதமான நாளாக கருதப்படுகிறது.
சிவனுக்கு 5 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும். இந்த ஆண்டு சிவராத்திரி எப்போது என்பதில் சிலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. அதாவது பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 12.09 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் 27ஆம் தேதி நள்ளிரவு 12.59 மணி வரை கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications