சத்தமில்லாமல் திட்டத்தை மாற்றும் ஜியோ.. இனி தான் ஆட்டமே இருக்கு! ஏர்டெல்லுக்கு பெரிய சிக்கல்
மும்பை: இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஜியோ இப்போது தனது ஒட்டுமொத்த செட் அப்பையும் மாற்றுகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்குக் கடும் போட்டியைக் கொடுக்க முடியும் என நம்புகிறது. ஜியோவின் இந்த புதிய திட்டம் என்ன.. இது அவர்களுக்கு எந்தளவுக்கு உதவப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய டெலிகாம் சந்தையில் மிக பெரிய புயலைக் கிளப்பியது ஜியோ.. இது டெலிகாம் சந்தையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது.. வெறும் சில ஆண்டுகளில் டெலிகாம் துறையில் டாப் இடத்திற்கும் வந்தது. இருப்பினும், சில பிரிவுகளில் ஏர்டெல் நிறுவனத்தை ஜியோவால் வீழ்த்த முடியாமலேயே இருந்தது. இதற்கிடையே ரிலையன்ஸ் ஜியோ தனது ஒட்டுமொத்த செட் அப்பையும் மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி சேவை
அதாவது 5ஜி சேவைக்கு ஜியோ இத்தனை காலம் வெளிநாட்டு நிறுவனங்களின் உபகரணங்களையே பயன்படுத்தி வந்தது. இப்போது அதற்குப் பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, அதன் மூலம் நாட்டில் தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஜியோ இறங்கியுள்ளது. இதன் மூலம் செலவுகளை பெருமளவு குறைக்க முடியும் என்றும் தெரிகிறது.
திட்டத்தை மாற்றும் ஜியோ
தற்போது வரை ஜியோ நிறுவனம் எரிக்சன் மற்றும் நோக்கியா உள்ளிட்ட ஐரோப்பிய நிறுவனங்களின் உபகரணங்களையே 5ஜி சேவைக்குப் பயன்படுத்தி வருகிறது. முன்பு ஹவாய் (Huawei) நிறுவனமும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், சீன அரசின் முதலீடுகள் இருப்பதால் பாதுகாப்பைச் சுட்டிக்காட்டி ஹவாஸ் நிறுவனத்திற்கு இந்திய டெலிகாம் ஆணையமான டிராய் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து இந்தியச் சந்தையில் நோக்கியா மற்றும் எரிக்சன் ஆதிக்கம் அதிகரித்தது.
ஜியோ நிறுவனம் நாட்டில் தனது 5ஜி சேவையை விரைவாக விரிவுபடுத்த இந்த இரு நிறுவனங்களின் உபகரணங்களையுமே அதிகம் பயன்படுத்தியது.. இதனால் ஜியோவின் செலவுகள் அதிகரித்தன. இந்த செலவுகளைக் குறைக்கவே ஜியோ இப்போது புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி இனி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைத் தனது 5ஜி நெட்வொர்க்கில் பயன்படுத்த ஜியோ முடிவு செய்துள்ளது.
எதற்கு பயன்படும்
இதற்காக ஜியோ மற்றும் சான்மினா கார்ப் என்ற நிறுவனம் இணைந்துள்ளது. முதற்கட்டமாக சென்னைக்கு அருகே தயாரிக்கப்படும் 5G செல்கள் மற்றும் ரேடியோ உபகரணங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தச் சின்ன பேஸ் ஸ்டேஷன்கள், அடர்த்தியான நகர்ப்புறங்களிலும் மால், மருத்துவனைப் போலக் கட்டிடங்களுக்கு உள்ளேயும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கட்டிடங்களுக்கு உள்ளேயும் பிராட்பேண்ட் கவரேஜ் மற்றும் திறனை மேம்படுத்த முடியும். ஜியோ யூசர்கள் அதிகரித்து வரும் நிலையில், எல்லா இடங்களிலும் அதிவேக இணைய வசதி இதன் மூலம் உறுதி செய்யப்படும்.
செலவு எவ்வளவு குறையும்
உள்நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஜியோவுக்கு என்ன லாபம் என்பது குறித்து ஜியோ வட்டாரங்கள் கூறுகையில், "ஜியோவின் செலவு கணிசமானதாகக் குறையும். பெரியளவில் இதுபோல உள்நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தினால் செலவில் சுமார் 50-60% வரை குறையும்" என்கிறார்கள். ஏனென்றால் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தும்போது இறக்குமதி வரிகள், ராயல்டிகள் உள்ளிட்ட பல கூடுதல் செலவுகள் இருக்கும். ஆனால், உள்ளூர் தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது இந்தச் செலவுகளை ஜியோவால் தவிர்க்க முடியும்.
தற்போது வரை ஏர்டெல் நிறுவனம் மட்டுமே தனது 5ஜி உபகரணங்களைத் தானே உற்பத்தி செய்து வருகிறது. இப்போது ஜியோவும் உள்நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தத் தொடங்கினால் அது ஏர்டெல்லுக்கு கடும் போட்டியைத் தரும். இருப்பினும், ஜியோ இதில் கணிசமான சேமிப்பை அடையக் குறைந்தது ஒரு லட்சம் 5ஜி செல்களை பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications