சூட்டிங் ஸ்பாட்டில் கங்கை அமரன் செய்த செயல்! 12 வருடம் கழித்து மீண்டும் சினிமா வந்தது ஏன்? ரோஜா ஓபன்
சென்னை: நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்! சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி. டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லெனின் பாண்டியன்' என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் களம் இறங்கியுள்ளது, ரசிகர்களுக்குப் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது! இந்த படம் குறித்துச் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, பல சுவாரசியமானத் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.

புயலை கிளப்பிய புன்னகை
நடிகை ரோஜா தென்னிந்திய சினிமாவில் 90ஸ்கள் மற்றும் 2000களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். தனது புன்னகை, துறுதுறுப்பான நடிப்பு, மற்றும் ஆக்ரோஷமானக் கதாபாத்திரங்கள் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். இவரே தெலுங்கிலும் பெரிய ஹிட் நடிகையாக இருந்தார்.
முக்கிய படங்கள்
உழைப்பாளி, சூரியன், வீரா, முத்துக் குளிக்க வாரீகளா, அசுரன் போன்றவை இவரின் சில வெற்றிப் படங்கள் ஆகும். நடிப்பை தாண்டி ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, முழு நேர அரசியல்வாதியாக மாறி, ஆந்திர பிரதேச அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
முழு நேர அரசியல்வாதியான பிறகு, "நான் நடிப்பதால் இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ தேவை இல்லாத டேக் பிரச்சனை வரக்கூடாது" என்று எண்ணி படங்கள் நடிப்பதைக் குறைத்துக்கொண்டதாக ரோஜா தெரிவித்தார். இடையில் தெலுங்கிலும், தமிழிலும் டிவியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய போதும், மீண்டும் நடிக்க யோசித்ததில்லை. ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனது நண்பர் சுப்பு பஞ்சு இந்தப் படத்தின் கதையைக் கேட்டுக் கதாபாத்திரத்தைப் பற்றிச் சொன்னபோது, "வீரா படம் பண்ணும்போது நானும் சுப்புவும் நல்ல நண்பர்கள். அதனால சுப்பு சொல்றார்னா ஏதாவது இருக்கும்னு கதை கேட்டேன்" என்றார் ரோஜா.
உணர்ச்சிபூர்வமான கதை
கதை கேட்டபோது அது "ரொம்ப HEART TOUCHING ஆக இருந்தது" என்றும், தனக்கு ஒரு நல்லக் கதாபாத்திரத்தைத் தான் சுப்பு பரிந்துரைத்திருந்தார் என்றும் கூறி, உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக அவர் தெரிவித்தார். "இப்ப இருக்குற வாழ்க்கையில எல்லாருமே சிட்டி லைஃபில் பிஸியாக இருக்காங்க. அவங்களை ஒரு கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போய் அங்க இருக்குற பாசம், எமோஷன் எல்லாத்தையும் இந்தப் படத்தில் காட்டியிருக்கோம்" என்றும் அவர் பகிர்ந்தார்.
கங்கை அமரனுடன் ஜோடி
இந்தப் படத்தில் இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரனுக்கு ஜோடியாக ரோஜா நடித்திருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் நடந்த ஒரு சுவாரசியமானச் சம்பவத்தையும் அவர் பகிர்ந்தார். "ஒவ்வொரு நாளும் கங்கை அமரன் ஷூட்டிங்கிற்கு வரும்போது பாட்டுப் பாடிட்டே வருவார். நீங்க என்னோட (DREAM GIRL) கனவு நாயகி உங்க பாட்டைப் பார்த்தவன் இன்னைக்கு உங்களோட ஹீரோவா நடிக்கிறேன் என்பார். அவர் ஒரு லெஜன்ட். அவர் இப்படி ஜோவியலாக அன்பாகப் பேசுறது ரொம்பச் சந்தோசமாக இருக்கும்" என்று நெகிழ்ந்து பேசினார் ரோஜா.
சிவாஜி பேரனுக்கு பாராட்டு
இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் பேரனான, தர்ஷன் கணேசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்ஷன் குறித்துப் பேசிய ரோஜா, "சிவாஜியோடப் பேரன் தர்ஷன், எந்தப் பந்தாவும் இல்லாம ஷூட்டிங்கிற்கு வருவார்" என்று எளிமையைப் பாராட்டினார். இயக்குநர் டி. டி. பாலச்சந்திரன் குறித்துப் பேசும்போது, "அந்தப் பெயரிலேயே ஒரு பவர் இருக்கு. பழைய பாலச்சந்தர் மாதிரி இவரும் ஆகணும்னு நான் ஆசைப்படறேன். அவருடைய இயக்கத்தில் நடிச்சது ரொம்ப ஈஸியாக இருந்துச்சு. எல்லாமே அவரே சொல்லி கொடுத்துடுவார்" என்று பாராட்டினார்.
'லெனின் பாண்டியன்' படம் மூலம் மக்கள் மீண்டும் தனக்கு ஆதரவு கொடுத்து "நானும் இன்னொரு ரவுண்டு வர அவங்க உதவி பண்ணுவாங்க" என்று நம்பிக்கையுடன் ரோஜா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications