துண்டு பேப்பரில் போன் நம்பர் எழுதி வீசிய சாய் பல்லவி.. உடனே கிளம்பிய ரசிகர்கள்.. சிக்கிய சென்னை நபர்
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான "அமரன்" படம் ரசிகர்களின் அபிமானத்தை பெற்று வருகிறது.. இதுவரை அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும், தரமான விமர்சனங்களையும் இந்த படம் பெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அமரன் படத்தினால், சென்னை இளைஞர் ஒருவர், புதுமையான சிக்கலில் சிக்கியிருக்கிறார்.
காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அமரன்.

அமரன் படம்: முகுந்த்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.. ராஜ்குமார் பெரிய சாமி டைரக்ஷனில் உருவாக்கப்பட்டுள்ள, இந்த படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில், சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும், தங்களது நடிப்பில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டதாக பாராட்டுக்கள் கிடைத்துவருகின்றன. அதேபோல, நல்ல வசூலையும் அள்ளி குவித்து வருகிறது.
அமரன் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் அதாவது டிசம்பர் முதல் அல்லது 2து வாரத்தில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
புது சிக்கல்: இந்நிலையில், சென்னை இளைஞர் ஒருவர், அமரன் படத்தினால் புதுவித சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்.. அதாவது, இந்த படத்தில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி கசக்கி அவரிடம் தூக்கி வீசுவார்.
அந்த போன் நம்பர் தெளிவாக தெரியாவிட்டாலும், பல ரசிகர்கள் அந்த நம்பரை குறித்து வைத்து கொண்டுள்ளனர்.. அது சாய் பல்லவி நம்பர் என்று நினைத்து கொண்டு, அந்த நம்பருக்கு பலரும் அழைப்பு விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
போன் நம்பர்: ஆனால் சாய் பல்லவி பேப்பரில் எழுதி தூக்கிப்போட்டது, நிஜமாகவே சென்னையை சேர்ந்த இளைஞர் வி.வி.வாகீசன் என்பவரின் போன் நம்பராம்.. அமரன் படத்தை பார்த்துவிட்டு, அது சாய் பல்லவியின் போன் நம்பர் என்று நினைத்துக் கொண்டு, 100-க்கும் அதிகமான போன்கள் தனக்கு வந்து கொண்டேயிருப்பதாக வாகீசன் தெரிவித்துள்ளார்..
தீபாவளியன்று படம் ரிலீசானதுமே இப்படி போன்கள் வரதுவங்கிவிட்டதாம்.. அன்று ஒருநாள் மட்டும் 100 மிஸ்டு கால்கள், பல வாய்ஸ் மெசேஜ்கள் இருந்ததாம்.. வெளிநாடுகளிலிருந்தும் அழைப்பு வந்திருந்ததாம்..

சாய் பல்லவி: "சாய் பல்லவியிடம் பேச வேண்டும், சூப்பராக நடித்திருக்கிறார், அவரை பாராட்ட வேண்டும்" என்றெல்லாம் ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களாம். ஒருசிலர், முகுந்த் வரதராஜின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸின் உண்மையான போன் நம்பர் இது தான் என்று நினைத்து போன் செய்திருக்கிறார்கள்..
தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வரவும், படத்தின் டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் இருவருக்கும் சோஷியல் மீடியா பக்கத்தில் மெசேஜ் அனுப்பினாராம் வாகீசன். ஆனால், எந்த பதிலும் வரவில்லையாம்.
ஓயாத அழைப்புகள்: இந்த போன் நம்பரை 2 வருடமாக வாகீசன் வைத்திருப்பதுடன், வங்கி கணக்கு உள்ளிட்ட நிறைய விஷயங்களுக்கு இந்த நம்பரைதான் தந்திருக்கிறாராம்.. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அழைப்புகளை ப்ளாக் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
ரசிகர்களின் தொடர் அழைப்புகள் காரணமாக வேறுவழியில்லாமல் போனை சைலண்ட்டில் போட்டுவிட்டாராம்.. இதனால், தனக்கு வரவேண்டிய அவசர அழைப்புகளையும் ஏற்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளாராம் வாகீசன். ஆனால், இன்னும் 'அமரன்' படத்தை வாகீசன் பார்க்கவில்லையாம்.












Click it and Unblock the Notifications