"இந்த" உதவியை யாராவது செய்திருந்தால் அங்காடித் தெரு சிந்து உயிர் பிழைத்திருப்பாரோ.. மன்றாடி கேட்டாரே
சென்னை: அங்காடித் தெரு சிந்து பெங்களூரில் சிகிச்சை மேற்கொண்டிருந்தால் பிழைத்திருப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
அங்காடித் தெரு படம் மூலம் பிரபலமானவர் சிந்து. இவர் படித்துரை பாண்டிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அது போல் சீரியல்களிலும் நடித்திருந்தார். தற்போது கேன்சர் நோய் தாக்கி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.

இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்பகத்தில் வலி ஏற்பட்டது. அந்த நேரம் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவர் கொரோனா கால உதவிகளை செய்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஒரு முறை மார்பகத்திலிருந்து தண்ணீர் கசிந்தது.
அப்போது அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போதுதான் அவருக்கு மார்பக புற்றுநோய் என்பது தெரியவந்தது. இதற்காக ஒரு மருத்துவமனைக்கு போன போது அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை செய்து ஒரு பக்கம் மார்பை எடுத்துவிட்டார். இதனால் புண்கள் ஆறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்ததாக நடிகை சிந்து கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
ஆங்கில மருந்துகள், நாட்டு மருத்துவம் என எத்தனையோ வைத்தியங்களை பார்த்துவிட்டார் சிந்து. ஆனாலும் அவரது மார்பக புற்றுநோய் குறையாமல் அதிகரித்தது. தினந்தோறும் வலியால் அவதிப்பட்டு வந்த அவரது கையும் செயலிழந்து போனது. நண்பர்கள், நடிகை ஷகிலா உள்ளிட்டோர் செய்த உதவியாலும் அவர் செய்த தானம் தருமத்தினாலும் அங்காடி தெரு சிந்து இந்த 3 ஆண்டுகள் புற்றுநோயுடன் போராடினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மறுபக்கம் மார்பகமும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டார்கள். இதையும் சிந்து கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார். தனக்கு சினிமா கலைஞர்கள் உதவ வேண்டும். தன்னுடைய மகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு கொடுத்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
தனக்காக இல்லாவிட்டாலும் வாழ வேண்டிய வயதில் கணவனை இழந்த தன் மகளுக்காகவும் தனது பேத்திக்காகவும் நோயிலிருந்து மீள கடுமையாக போராடினார். ஆனாலும் இன்று அதிகாலை 2.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவரது இறப்புக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிந்து ஒரு முறை பேட்டியில் தனக்கு பெங்களூரில் சிகிச்சை கொடுக்க சிபாரிசு செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். அவர் அந்த பேட்டியில் கூறியிருந்ததாவது: எனக்கு கீமோ தெரபி கொடுத்தாலும் கையில் மருந்து போட்டதுமே கை வீங்கிவிடுகிறது. இதனால் எனக்கு அந்த சிகிச்சையுமே பலனளிக்கவில்லை. அப்போதுதான் அங்கிருந்த டாக்டர் கூறினார், புற்றுநோயை கரைக்கும் மிஷின் ஒன்று உலகத்திலேயே 4 இடங்களில்தான் இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 4 இடங்களில் மட்டுமே இந்த மிஷின் இருக்கிறது.
அங்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாம். செல்வாக்கு இருந்தால் இலவசமாக கூட அந்த சிகிச்சையை செய்து கொள்ளலாமாம். இல்லாவிட்டால் ஒரு சிட்டிங்கிற்கு 5 ஆயிரம் வீதம் 25 சிட்டிங் எனக்கு செய்ய வேண்டும். அதற்கான செலவு, நான் தங்குவதற்கு சாப்பிடுவதற்கு என எல்லாவற்றுக்கும் பணம் தேவை. எனவே நான் விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளேன். இந்த சிகிச்சை பெற அவரிடம் உதவி கேட்பேன் என சிந்து கூறியிருந்தார். ஆனால் அதற்குள் அவர் விண்ணுலகம் சென்றுவிட்டார். ஒருவேளை அவருக்கு பெங்களூரில் புற்றுநோயை கரைக்கும் சிகிச்சை கிடைத்திருந்தால் பிழைத்திருந்திருப்பாரோ என்னவோ!












Click it and Unblock the Notifications