Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திரபாபு ஒரு சுயம்பு.. கடைசி நேரத்தில் இரவெல்லாம் பாடி.. அப்ப ஜெமினி கணேசன் இல்லன்னா? உருகிய தம்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுயம்புவாக மேலே வந்தவர் நடிகர் சந்திரபாபு என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் அவரது சகோதரர் ஜவஹர்.. முதல் சம்பளம் ரூ.100 வாங்கியபோது, அதை சந்திரபாபு என்ன செய்தார்? என்பது குறித்தும் சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு, பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் இளைய சகோதரர் ஜவஹர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், சந்திரபாபு நடிக்க வந்தது எப்படி? முதல் படத்தில் அவருக்கு சான்ஸ் கிடைத்தது எப்படி? என்பது குறித்தெல்லாம் விலாவரியாக கூறியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

chandrababu gemini ganesan

சிறைவாசம்: "1927ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார் சந்திரபாபு.. நாங்கள் கிறிஸ்தவர்கள்.. தூத்துக்குடி பனிமய மாதா திருநாள் அன்றுதான் சந்திரபாபு பிறந்தார். எங்கள் அப்பா சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையர்களை எதிர்த்து 7 முறை சிறை சென்றவர்.. 10 வருடம் சிறையில் இருந்திருக்கிறார்.

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பாளையங்கோட்டை சிறையிலிருந்து என் அப்பா வெளிவந்தார். 5ம் தேதியே சந்திரபாபு பிறந்தார். அதனால், "பனிமய தாஸ்" என்று பெயர் வைத்தார். சென்னையில் 1945-ல் திருவல்லிக்கேணியில் 5 ரூபாய் வாடகை வீட்டில் இருந்தோம்.. சின்ன வயதிலிருந்தே பாபு நல்லா பாடுவார். இரவெல்லாம் பாடிட்டே இருப்பார்..

பாரதி பாடல்கள்: என் அப்பா சந்திரபாபுக்கு பாரதியார் பாடல்களை சொல்லி தருவார்.. பிறகு காங்கிரஸ் கூட்டங்களுக்கு சந்திரபாபுவை அழைத்து சென்று மேடைகளில் பாட வைப்பார். சினிமாவுக்கு சென்றபிறகும் சரி, கடைசி காலத்திலும் சரி, இப்படி இரவில் பாடுவதை மட்டும் விட்டதில்லை. பாடிபாடி விடிகாலையில்தான் தூங்குவார் இதனால் ஷூட்டிங்குகளுக்கெல்லாம் லேட்டாக போய், கெட்ட பெயரையும் சம்பாதித்தார்.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்.. இதற்கான முயற்சியில் சுயம்புவாகவே இறங்கினார். ஜெமினி ஸ்டுடியோவில், புரடக்‌ஷன் மேனேஜராக இருந்த ஜெமினி கணேசன், ஸ்டுடியோவுக்கு வருபவர்கள் சிறப்பாக நடித்தால், அவர்களை எஸ்எஸ் வாசனிடம் நடிப்புக்காக அழைத்து செல்லும் வேலையில் இருந்தார்.

ஜெமினி கணேசன்: அப்போது ஜெமினியிடம் சந்திரபாபு சென்று வேலை கேட்கிறார்.. சந்திரபாபுவின் நிறம், உடை, பாட்டு திறமை, ஆங்கில பேச்சு இதெல்லாம் பார்த்ததுமே ஜெமினிக்கு பிடித்துவிட்டது. இருவரும் நண்பர்களாகிவிட்டனர். ஆனாலும், சந்திரலேகா படம் ஷூட்டிங்கில் வாசன் பிஸியாக இருந்ததால், ஜெனிமியால் சான்ஸ் வாங்கி தர முடியவில்லை.

இதனால் மனம் நொந்துபோன சந்திரபாபு, சினிமாவில் வாய்ப்பு இல்லையானால் துத்தநாகம் விஷத்தை குடித்துவிடுவதாக சொன்னார். ஆனால், சந்திரபாபு விளையாட்டுக்கு சொல்வதாக ஜெமினி நினைத்தார். ஒருநாள் உண்மையிலேயே, ஜெமினி ஸ்டுடியோவில் துத்தநாகத்தை குடித்துவிட்டார் சந்திரபாபு. இதைப்பார்த்து பதறிப்போன ஸ்டியோக்காரர்கள், சந்திரபாபுவை மருத்துவமனையில் சேர்த்து, உயிர்பிழைக்க வைத்தனர்.

தன்னுடைய ஸ்டுடியோவில் தற்கொலை முயற்சியா? என்று இந்த விஷயத்தை கேட்டு அதிர்ந்து போனார் வாசன். பிறகு, சந்திரபாபுவை அழைத்துவரும்படி ஜெமினியிடம் சொன்னார். சந்திரபாபுவின் வீடு, அப்பா பெயரை கேட்டார் வாசன். அதற்கு சந்திரபாபு, நான் திருவல்லிக்கேணியில் இருக்கேன், என் அப்பா சுதந்திர வீரர் ஜேபி.ராட்ரிக்ஸ் என்றார்.

இதைக்கேட்டதுமே வாசன், நீ கிறிஸ்டியனா? பறையர்கள், பள்ளர்கள் சாதியா? " என்று வெளிப்படையாகவே கேட்டார்.
உடனே சந்திரபாபு, நாங்கள் மீன்பிடிக்கும் பரதர்கள் என்றார்.. "ஓ, மீன்பிடிக்கும் மீனவனா நீ? படத்தில் சான்ஸ் பற்றி அப்பறம் சொல்லி அனுப்புகிறேன்" என்று சொல்லிவிட்டார் வாசன்.

பிராமணர்கள்: சான்ஸ் தர வந்தவர், சாதியை கேட்டதுமே, வெளியே போக சொல்லிவிட்டார். பிராமணர்களாக இருந்தால் மட்டுமே அன்றுவாய்ப்பு கிடைக்கும். கேஜே மகாலிங்கம்தான், கொத்தமங்கலம் சுப்பு, நாராயண ராவ், ராஜேஸ்வர ராவ், ஜெமினி கணேசன் இவர்கள் ஜெமினி ஸ்டுடியோவில் எல்லோருமே பிராமணர்கள்தான்.. இப்படியிருந்தால் கிறிஸ்தவர் ஒருவருக்கு எப்படி சான்ஸ் கிடைக்கும்?

இதற்கு பிறகு கேஜி மகாதேவன், "ராஜூ மை டார்லிங்" என்ற படத்தை எடுத்தபோது, பாக்சிங் காட்சியின் ரசிகராக நடிக்க ஒருவர் தேவைப்பட்டார். அப்போதுதான், ஜெமினி கணேசன், மகாதேவனிடம் சந்திரபாபுவை பற்றி சொல்லி அழைத்து சென்றார்.

இங்கிலீஷ்: ஆனால் அதற்கு முன்பு சந்திரபாபுவிடம் ஜெமினி கசேணன், "ஸ்டுடியோவுக்கு வந்து இங்கிலீஷில் பேச வேண்டும், பெயரை கேட்டால் பாபு என்று மட்டுமே சொல்ல வேண்டும். ஆனால், கிறிஸ்தவர் என்று சொல்லக்கூடாது" என்று சொல்லி அழைத்து சென்றார். ஜெமினி கணேசன் அப்படியே கமல்ஹாசன் மாதிரி.. எங்கள் வீட்டில் அசைவ உணவுகளை சாப்பிடுவார். அதனால்தான், சந்திரபாபு, ஜெமினி கணேசனுக்கும் நல்ல நட்பு இருந்தது.

இப்படித்தான் ஜெமினியால் சான்ஸ் கிடைத்தது.. முதல் சீனிலேயே 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நடித்து காட்டினார் சந்திரபாபு.. இந்த படத்தில் இந்த சீனை பார்த்து, விழுந்து விழுந்து சிரித்தார் வாசன்.. அதற்கு பிறகு முதல் சம்பளமாக 100 ரூபாய் தந்தார்கள். அந்த பணத்தில், 80 ரூபாய் தந்து கிராமபோன், 10 ரூபாய்க்கு கிராமபோன் பிளேட்டுகள், 10 ரூபாக்கு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டார்.

அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய்: நாங்கள் அப்போது வீட்டில் 13 பேரும் பட்டினியாக கிடந்தோம்.. ஆனால், அரிசி வாங்கிட்டு வந்திருக்கலாமே என்று என் அம்மா சந்திரபாபுவை திட்டினார். மறுநாளே மறுபடியும் வாசன் ஸ்டுடியோவுக்கு செல்கிறார்.. அங்கே வாசன் சந்திரபாபுக்கு 5 ரூபாய் கட்டு 2 என மொத்தம் 1000 ரூபாயை படத்துக்கான சம்பளமாக தந்தார்.. தலைகாலே புரியல சந்திரபாபுவுக்கு.. உடனே எங்க வீட்டில் மண்ணெண்ணெய், அரிசி, துணிமணிகள் எடுத்து தந்து, வீட்டின் நிலைமையே மாறியது" என்று தெரிவித்துள்ளார் ஜவஹர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+