Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது ஜெமினி கணேசன் முதல் ரஜினி வரை! டி.ராஜேந்தரனுக்கு இத்தனை உறவினர்களா? கேரளா வரை நீள்கிறதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தருக்கு ரஜினிகாந்த் முதல் மோகன்லால் வரை இத்தனை உறவினர்களா?

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பூந்தோட்டம் என்கிற ஊருக்கு (மாயவரம் அருகே) கிழக்குப்பக்கம் சென்றால் ரெட்டக்குடி என்கிற ஊரில் உள்ள டீக்கடையில் தான் முதன் முதலாக தாத்தா மூலம் ராஜேந்திரனைப் பற்றி கேள்விப்பட்டேன்.

television t rajendar rajinikanth

தாத்தா தான் டீக்கடை ஓனர், டீ மாஸ்டர், மளிகை கடை ஓனர் எல்லாம். தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் போயிருந்த போது தான் டீக்கடையில் தாத்தா ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். "யாரோ ராஜேந்திரனாம். மாயவரத்தில் நாஞ்சில் நாட்டுல வீடு போல. அவன் படம் தான் ஒரு தலை ராகம். காலேஜ் போகும் போது டிரெய்ன்ல கூடப் படிச்ச பொண்ணு மேல ஆசைப்பட்டானாம். அது நடக்கலை. அதையே படமா எடுத்துட்டான்.."

ராஜேந்தரின் முதல் படம் ஒரு தலை ராகத்துக்கு மாயவரமே அன்று தலைவணங்கியது. காரணம் எந்த இயக்குனரும் செய்யாத தன் முதல் படத்தை தன் ஊரிலேயே எடுத்தது தான். மயிலாடுதுறை மக்களுக்கு பின் டி.ராஜேந்தர் ஒரு எளிமையின் நாயகன் தான். நம் மண்ணிலிருந்து சினிமா கனவுகளோடு சென்று ஜெயித்தவன். படத்தின் சக்சஸ் மூலம் ராஜேந்தரை ஜேப்பியார் அள்ளிக் கொண்டு போய் எடுத்த படம் தான் 'வசந்த அழைப்புகள்'.

அதே ஒரு தலை ராகம் டீமில் சங்கரை எடுத்து விட்டு பாக்கி ஆட்களை வைத்து வசந்த அழைப்புகளை எடுத்தார் ராஜேந்தர். அதில் நடிக்கவும் செய்தார் அவர். படம் ஓடியதோ இல்லையோ ராஜேந்தர்-உஷாவின் வாழ்வில் வசந்த அழைப்புகளாக இருந்தது அப்படம். அப்போது இருவருக்குமான நட்பு சில வருடங்களுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது. இதற்குப் பின்னான கதை இப்போது தேவையற்றது.

வசந்த அழைப்புகளை அடுத்து ரயில் பயணங்களில் என்கிற இசைப் படத்தை கொடுத்தார் ராஜேந்தர். இரயில் பயணங்களில் வசந்தம் பாடி வர வைகை ஓடிவர.... பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. ராஜேந்தரின் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் உருவாகத் தொடங்கியது இக்கால கட்டத்தில் தான். ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்தை தன் காதல் வாழ்வின் அனுபவங்களை சொன்னது போல் ராகம் தேடும் பல்லவி படத்தில் தன் சினிமா ஆசைகளையும், போராட்டத்தையும் கலந்து கதை பண்ணி இருந்தார்.

அதே ஒரு தலை ராகம் சங்கர், சின்ன வீடு அனு நடித்தார்கள். ஏனோ அப்படம் ஓடவில்லை.
இந்த நிலையில் திடீர் திருமணமாக உஷா-ராஜேந்தர் திருமணச் செய்தி பத்திரிகைகளில் வெளி வந்தது. அதோடு மக்களுக்கு சிம்பாலிக்காக ஒரு விஷயத்தையும் தந்தார் டி.ஆர். 'உயிருள்ளவரை உஷா' என்கிற அப்படத்தின் விளம்பரம் நல்ல தரமான இலக்கிய சிலேடையாக இருந்தது.

அதோடு மட்டுமல்ல. ராஜேந்தர் என்கிற ஹீரோ மெட்டீரியலும் வெளிவந்தது. இந்தத் தருணத்தில் தான். காதலுக்காக உயிரைக் கொடுக்கும் 'செயின் ஜெயபால்' அன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டான் என்பதே நிஜம். ஊரெங்கும் வெள்ளை உடைகளில் கையில் செயினோடு ராஜேந்தர் நிற்கும் போஸ்டர் திரும்பிப் பார்க்க வைத்தது. பின் அடுத்து பத்தாண்டுகளுக்கு ராஜேந்தரின் படங்கள் வினியோகஸ்தர்களுக்கு பணம் கொட்டும் மரமாக இருந்தது.

உஷா சிறந்த நிர்வாகி. அதனாலேயே தன் சொந்தப் பணத்தில் 'தஞ்சை சினி ஆர்ட்ஸ்' கம்பெனி தொடங்கி உயிருள்ளவரை உஷா படத்தை எடுத்தார் டி.ஆர். அதிமுகவின் அரசவை நர்த்தகி ஸ்வர்ணமுகி. ஸ்வர்ணமுகியின் தங்கை உஷா. உஷாவின் கணவர் டி.ஆர் பக்கா திமுக. உஷாவின் சிறந்த நிர்வாகத்தால் தன் பால்யத்தில் மாற்று வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட ராஜேந்தர் கோடீஸ்வரானாக மாறினார். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. கதை, திரைக்கதை என பலவற்றையும் செய்த டி.ஆர் ஒளிப்பதிவையும் சேர்த்துக் கொண்டு 'அஷ்டாவதானி' எனப் பெயர் பெற்றார்.

எம்.ஜி.ஆரோடு மோதல், பின் திமுகவுக்கு வருகை, அதில் உள்ளுறந்து உழைத்து கட்சியை வளர்க்க பாடு பட்டார் டி.ஆர். தொடர் தோல்விகளால் சோர்ந்திருந்த கட்சித்தொண்டர்களை டி.ஆரின் மேடைப்பேச்சும், நடிகன் என்கிற முகமும் உற்சாகமாக வைத்தன. இதற்கு திமுக என்றுமே டி.ஆருக்கு கடமைப்பட்டிருக்கிறது. கட்சிக்காக அவரே இசையமைத்து பாடிய பாடகள் திமுக மேடைகளில் தேசிய கீதமாக ஒலித்தது.

'பாளையங்கோட்டை சிறையினிலே... பாம்புகள் பல்லிகள் நடுவினிலே', 'லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்.. டண்டணக்கா', 'அய்யாவைக் கேட்போம் அம்மாவை கேட்போம்..' பாடல்கள் கேட்காத திமுக தொண்டன் கிடையாது. நெகமம் தொகுதியில் நெகமம் கந்தசாமிக்கு பயந்து யாருமே பிரச்சாரத்துக்கு போகாத போது ராஜேந்தர் துணிச்சலாக அங்கு சென்றார்... பேசினார்.

பின் ராஜேந்தருக்கு சிம்பு பிறந்ததும் காலம் மாறியது. ராஜேந்தர் தன்னை செதுக்கிக் கொள்வதை விட சிம்புவை செதுக்குவதில் கவனம் செலுத்தினார். சிம்புவுக்கு நடிப்பு முதல் அனைத்துப் பயிற்சிகளையும் கொடுத்து தன் படங்களில் இடம் பெற செய்தார் டி.ஆர். எட்டு வயதிலேயே தன் மகனை சூப்பர் ஸ்டாராக மனதில் வரித்துக் கொண்டு திரையிலும் அதைக் காண்பித்தார் டி.ஆர்.

ஒரு கட்டத்தில் ஜோசியத்தில் நிபுணராகவும், பக்திமானாகவும் இருந்த டி.ஆர் பின் செக்யூலர் ஆனார். ஸ்வர்ணமுகி மூதாதையர் மதமான கிறிஸ்தவத்தை தழுவியதும், மகள் கிறிஸ்தவரை மணந்ததும், மகன் இஸ்லாமியப் பெண்ணை மணந்த போதும் டி.ஆர் 'மதம் முக்கியமில்லை. மனிதமே முக்கியம்' என்கிற உன்னத நிலைக்குப் போயிருந்தார். எம்மதமும் சம்மதம் அவருக்கு.

காலம் டி.ராஜேந்தரை பல அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கியது. அரசியல் அவருக்கு பிடிபடாமல் கை நழுவி ஓடியது. பூங்கா நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகி கோட்டையிலும் கால் வைத்தார். பின் தனிக்கட்சி. வைகோவின் பிரிவுக்குப் பிறகு தன் கட்சியை திமுகவில் இணைத்தார். பின் வெளிவந்தார். கட்சி தொடங்கினார். அதிமுகவை ஆதரித்தார். ஆனாலும் அரசியலில் மிளிரவில்லை. இடையில் உஷா என்கிற பத்திரிக்கை தொடங்கினார்.

யூடியூப் சேனல்கள் பாப்புலராகும் முன்பே டி.ஆர் முதன் முதலில் 'குறள் டிவி' என்கிற சேனலை தொடங்கியவர். ஆனாலும் ஏனோ பின் விட்டு விட்டார். அதை தொடர்ந்து நடத்தி இருந்தால் தமிழின் முதல் சேனலாக குறள் டிவி இருந்திருக்கலாம்.
வீராசாமி என்கிற படுதோல்வியோடு சினிமா நடிப்பை விட்ட ராஜேந்தர் தன் எதுகை, மோனைப் பேச்சால் இன்றும் மக்களால் அதிசயமாகப் பார்க்கப்படுபவர்.

கொஞ்சம் ஓவர்டோஸாகத்தான் பேசினார். விஜய்யின் புலி பட விழாவில் அவர் பேசியதெல்லாம் குழம்பில் போட்ட ஓவர் புளி. 'தன்மானச்சிங்கம் டி.ஆர்' என திமுகவில் முன்பு போஸ்டர் அடிப்பார்கள் திமுகவில். இன்று அந்த சிங்கத் தன்மையை இழந்து காமெடியாக பார்க்கப்பட அவரே காரணகர்த்தா. ரெட்டக்குடி போன்ற குக்கிராமத்தில் கேட்டப் பெயரை பின்னாளில் கேரளத்தில் கொச்சி போன்ற நகரங்களில் மலையாளிகள் பேசக் கேட்டிருக்கிறேன். அது தான் டி.ஆர்.
டி.ராஜேந்தர். மனைவி உஷா.

உஷாவின் அம்மாவின் சகோதரி ஜென்டில் மேன் பாட்டி ராதாபாய். அவரின் மகள் குட்டி பத்மினி. குட்டி பத்மினியின் சகோதரி கணவர் பாப்ஜி. பாப்ஜியின் அம்மா புஷ்பவல்லி. புஷ்பவல்லியின் மகள் ரேகா. ரேகாவின் அப்பா ஜெமினி. ஜெமினி- சாவித்திரிக்கு மகள் விஜய சாமுண்டீஸ்வரி. விஜய சாமுண்டீஸ்வரியின் மகனின் மாமனார் ஒய்.ஜி.மகேந்திரன். ஒய்.ஜி.மகேந்திரனின் சகலை ரஜினி. ரஜினியின் மைத்துனர் ரவி.

ரவியின் மனைவியை தொடர்ந்தால் அது பாக்யராஜ், அபஸ்வரம் ராம்ஜி, பத்மா சுப்ரமண்யம், பாலாஜி, மோகன்லால் வரை நீளும். மாயவரத்தில் தொடங்கி கொச்சி வரை போய்விட்டது உறவு.
மாயவரம் தந்த கலைமகன் டி.ஆர்....
சில நினைவுகள்..... இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+