Lakshmi Stores Serial: அடக் கொடுமையே.. ராஜேஷ்குமார் சீனை சுட்டுட்டாங்களே இந்த லட்சுமி ஸ்டோர்ஸ்!
சென்னை: ஆஹா.. அங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையை டிவி சீரியல்களிலும் கூட காப்பி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிரச்சியாக இருக்கிறது இதைப் பார்த்தால்.
சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில்தான் இந்தக் கூத்து நடந்திருக்கிறது. நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியாகி வரும் விறுவிறுப்பான தொடர்தான் விபரீதங்கள் இங்கே விற்கப்படும். 2 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. அதற்குள் அதிலிருந்த ஒரு காட்சியை சுட்டு விட்டார்கள் லட்சுமி ஸ்டோர்ஸ் கதை இலாகாவினர்.
இந்த சீரியலின் கதையே ரொம்பக் கொடுமையாக இருக்கிறது. நம்ப முடியாத காட்சிகள் நிறையவே இருக்கிறது. ஒரு மத்திய இணை அமைச்சர் காமெடியன் ஒருத்தரை சொந்த உதவியாளராக வைத்துக் கொண்டு இருப்பது நகைப்புக்கு உரிய விஷயம். அதுவும் மத்திய இணை அமைச்சர் என்னதான் தவறு செய்து இருந்தாலும் சாதாரண குடும்பத்து பெண்ணான மகாலட்சுமி சர்வ சாதாரணமாக வீட்டுக்கு போய் பொளேர் பொளேர்னு அடித்து விட்டு வருவது நல்ல காமெடி.
இந்த நிலையில் நமது இணையதளத்தில் வெளியாகும் ராஜேஷ்குமார் கதையில் இடம் பெற்ற ஒரு காட்சியை சுட்டு இவர்கள் சீனாக்கியுள்ளனர். பார்த்தபோதே பகீரென்றது. அதுவும் எழுத்தாளர் ராஜேஷ்குமாரே நம்மைத் தொடர்பு கொண்டு இப்படியா காட்சியை திருடுவார்கள் என்று வருத்தப்பட்டார்.
பாக்கியலட்சுமி ரவி
கதை நாயகர்கள் ரவியும்,பாக்கியலட்சுமியும் காதலிச்சுக்கிட்டு இருக்கும் போதே, திருட்டு கல்யாணம் செய்துக்கற மாதிரி ஆகிறது. அது யாருக்கும் தெரியாமல் போனதில், இப்போது மினிஸ்டரின் மகள் தேஜாவுக்கும், ரவிக்கும் கல்யாணம் செய்து வைப்பது என்று ரவியின் அண்ணன் தேவராஜ், ரவியை மிரட்டி பணிய வைக்கிறார். ரவிக்கு கோட் சூட் எடுத்து கொடுத்தனுப்பி, மினிஸ்டர் வீட்டில் விருந்துக்கு அழைக்கிறார்கள்.
வெறுப்பில் ரவி
ரவி வெறுப்பாக தேஜா கொடுத்த உடையை போட்டுக்கொண்டு, அண்ணன் வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் மினிஸ்டர் வீட்டுக்கு விருந்துக்கு போறான். அங்கு அவரை வரவேற்ற மினிஸ்டர், மகள் தேஜாவை அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கறாங்க. ரவி இந்த டிரஸ்ல எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமான்னு தேஜா வியந்து ஆசையில் பார்க்கிறாள். அதற்குள் மினிஸ்டரின் தம்பி ஒரு நிமிஷம் மாப்பிள்ளை..உங்களுக்கு ஒரு சர்பிரைஸ் கிஃப்ட் என்று சொல்லி, கையில் பிஸ்டலை எடுத்து காண்பிக்கிறார்.
மினிஸ்டர் வீடாச்சே!
மினிஸ்டர் வீடாச்சே...துப்பாக்கி பாதுகாப்புக்கு பரிசாக தருவாங்க போலன்னு நினைச்சாலும், துப்பாக்கியைப் பார்த்தால் பதற்றம் இருக்கத்தானே செய்யும். மினிஸ்டரின் பிஏ நான் ஒளிஞ்சுக்கறேன்னு சோபாவுக்கு பின்னால் மறைஞ்சுக்கறார். அடுத்த சில நொடிகளில் மினிஸ்டரின் தம்பி துப்பாக்கியை சுட, அதிலிருந்து பூக்கள் ரவி மேலும், தேஜா மேலும் விழுகிறது.
எங்கியோ பார்த்த
இதுதாங்க சுட்ட பழம்.. அதாவது சுடப்பட்ட காட்சி. எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விபரீதங்கள் இங்கே விற்கப்படும் தொடர் கதையில், ஈஸ்வரின் பிறந்த நாளுக்கு வளர்மதி கொடுக்கும் சர்ப்ரைஸ் காட்சி தாங்க இது. கான்செப்ட்டை அப்படியே சுட்டு விட்டனர். சினிமாவில்தான் ராஜேஷ்குமாரின் தொடர்களை சுடுகிறார்கள் என்றால் இப்போது டிவி சீரியல் வரைக்கும் இந்த திருட்டு வந்திருப்பது அதிர வைக்கிறது.
அம்புட்டு டிரை ஆகிப் போச்சாப்பா உங்களுக்கு மூளையெல்லாம்!