லாஸ்ட் நேரத்தில் அதுவும் ஓடும் காரில் வரிகளை எழுதிய நா.முத்துக்குமார்.. 50வது பிறந்தநாள் சர்ப்ரைஸ்
சென்னை: பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50-வது ஆண்டு பொன்விழாவை, தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி சென்னையில் ஜூலை 19-ந்தேதி நேரு ஸ்டேடியத்தில் 'ஆனந்த யாழை' என்ற பெயரில் இசை கச்சேரி நடக்கிறது. இதுகுறித்த அறிவிப்புதான் வெளியாகியிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் படவுலகில் தன்னுடைய பாடல்கள் மற்றும் கவிதைகளின் மூலம் தனி முத்திரையை பதித்தவர், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழை பெற்றவர் நா.முத்துகுமார். அதற்குள் ஆயிரக் கணக்கான பாடல்களை எழுதி முடித்துவிட்டார்.. 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகளையும் வாங்கிவிட்டார்.
வித்தியாசமான சூழல்
நா.முத்துக்குமார் பாடல் எழுதும் சூழல்களே வித்தியாசமானது.. எப்போதுமே நெருக்கடியான சூழ்நிலையில்தான் பாடல்கள் எழுத பிடிக்குமாம்.. அதேபோல, வீட்டின் அறை அல்லது ரெக்கார்டிங் ஸ்டுடியோகளில் நிறைய கவிதைகள், பாடல்களை எழுதியிருக்கிறாராம்.
ஆனால் ஒருநாள் மதியம் 3 மணிக்கு போன் செய்து, மாலை 5 மணிக்கு வாமனன் படத்தின் பாடல் ரெக்கார்டிங் என்றார்களாம்.. அப்போது காரில் சென்று கொண்டிருந்தாராம் முத்துக்குமார். உடனே அந்த படத்தின் இயக்குநருடனும், யுவன்சங்கர் ராஜாவுடனும் பேசி, எழுதிவிட்டாராம்.. காரில் செல்லும்போதே எழுதி முடிக்கப்பட்ட பாடல்தான் "ஒரு தேவதை".
10 நிமிடத்தில் எழுதிய பாடல்
அதேபோல, தலைநகரம் படத்தில் 'ஏதோ நினைக்கிறேன்' என்ற பாட்டை, போனிலேயே டியூன் கேட்டு, 10 நிமிடத்தில் எழுதி முடித்துவிட்டாராம்.
நா.முத்துக்குமார் தன்னுடைய காதல் உணர்வுகளை வார்த்தைகளாய் வடித்தவர்.. உறவின் முக்கியத்துவத்தை உணர வைத்தவர், அப்பாக்களின் வலிகளையும் புரிய வைத்தவர்.. திரைப்பட பாடல்கள் மட்டுமில்லை, கவிதை தொகுப்புகள், நாவல் என பல பரிமாணங்களில் வாழ்ந்தவர்.
தனது 41வது வயதிலேயே கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது..
ஆனந்த யாழை
தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படைப்புகளை கொடுத்த நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் ஜூலை 12ம் தேதி வருகிறது. இதனை சிறப்பிக்க திரையுலகினர் முடிவெடுத்துள்ளனர். அதனால் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 5ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு 'ஆனந்த யாழை' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் நா.முத்துக்குமார் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.. இது தொடர்பாக திரையுலகினர் சார்பில் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
தலைமுறைக்கே காதல் ஆறுதல்
தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும் ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும் அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய உள்ளது.
திரைத்துறைக்கு கவிஞர் நா.முத்துக்குமார் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன்
இதில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே.பிரசன்னா, பாடகர்கள் திப்பு, உத்ரா, சைந்தவி, ஹரினி, சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்துகொள்கிறார்கள்.
இந்த தகவலை பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் லிங்குசாமி, ராம், விஜய், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications