கழுத்தை அறுப்பேன் என்று கமலை விமர்சித்த சீரியல் நடிகர் ரவிச்சந்திரனுக்கு பாஜகவில் பெரிய போஸ்டிங்
சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ். சன் டிவியில் மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். சில படங்களிலும் நடித்திருந்தாலும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.. இவருக்கு தற்போது பாஜகவில் முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
நடிகர் ரவிச்சந்திரன் சின்னத்திரை மூலம் அறிமுகமானவர்.. தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்து சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வருகிறார்.. எனினும், சீரியலில் இவரது முக்கியத்துவம் அதிகமாகும்..

குறிப்பாக விஜய் டிவியின் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்து புகழ்பெற்றவர்.. அதேபோல சன்டிவியில் வரும் மருமகள் சீரியலில் ஹீரோயினின் அப்பாவாக நடித்தும், ஜீ தமிழில் இதயம் சீரியல் உள்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்தும் பலராலும் அறியப்பட்டவர்.
டிவி சீரியல் நடிகர்
இவர் அடிக்கடி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். முக்கியமாக, பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் கருத்துகளையும், இந்து மதம் பற்றி விமர்சனம் செய்வோரை கடுமையாகவும் சாடி வருகிறார்... அந்தவகையில், நடிகர் சூர்யா உட்பட பலரையும் விமர்சித்த நிலையில், மநீம கமல்ஹாசனையும் கடுமையாக விமர்சித்து பரபரப்பை கிளப்பினார்.
அந்தவகையில், சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 20ம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது.. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் பங்கேற்றார்.
சர்வாதிகார சங்கிலிகள்
அப்போது மேடையில் பேசும்போது, 2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த நீட் சட்டம்... அப்படியொரு சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்வி தான்.
அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. இது சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான். இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும்'' என்று பேசியிருந்தார்.
கமலின் கழுத்தை அறுத்து விடுவேன்
இதற்கு டிவி நடிகர் ரவிச்சந்திரன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடைய பேட்டிகளில் கமல்ஹாசனின் தொண்டையை அறுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுத்து பேசிவந்தார்.
கமல் கழுத்தை அறுத்து விடுவேன்' என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இவர் பேசியது மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது.. சோஷியல் மீடியாவில் இவரை எதிர்த்து கமெண்ட்கள் காரசாரமாக பதிவாகின..
பிறகு, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமிஷனர் ஆபீசில் புகாரும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகாரில் கைதில் இருந்து தப்பிக்க நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றது நினைவிருக்கலாம்..
நட்சத்திர பேச்சாளர்?
இந்நிலையில் தற்போது பாஜகவில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க போகிறது.. இதற்காக பாஜக பலவிதமான வியூகங்களை முன்னெடுத்து வருகிறது.. ஏற்கனவே பாஜகவில் ஏற்கனவே நட்சத்திர பேச்சாளர்கள் அதிக அளவில் உள்ள நிலையில், ரவிச்சந்திரனுக்கும் முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய தேர்தலில் எதிர்க்கட்சிகளை விமர்சித்து பிரச்சாரம் செய்ய ரவிச்சந்திரனையும் பாஜக களமிறக்கலாம் என தெரிகிறது.
அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை
தனக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கியது குறித்து ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள ரவிச்சந்திரன், ஒரு நடிகனாக கமல் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆனால், இந்துக்களின் நம்பிக்கையான விஷயமான சனாதானம் குறித்து விமர்சனம் செய்தால் எப்படி ஏத்துக்க முடியும்? எனவே எதிர்ப்பை பதிவு செய்தேன். அதை மீடியாவில் பெரிதாக்கிட்டாங்க.
கமலை விமர்சித்தற்காக இந்த பதவி தரப்படவில்லை.. அதுக்கும் பிரச்சார அணி பொறுப்பு கிடைச்சதுக்கும் தொடர்பில்லை. கட்சிக்காக நான் பேசிட்டு வர்றதை கவனித்துவிட்டு, அவர்களாகவே தந்திருக்காங்க.. இனி கட்சி வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மட்டுமே பேசவேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications