சிவாஜி வீட்டு மாடியில் யாரந்த சிறுவன்? தட்டு தங்கம், டேபிள் தந்தம்.. அன்னை இல்லம் பெருமைகள்: பிரபலம்
சென்னை: வருமானமே இல்லாதபோது, கடன் வாங்கி சினிமா படத்தை எடுப்பது எந்த விதத்தில் சரியாகும்? இது எப்படி சினிமாவையே சுவாசித்து வளர்ந்த துஷ்யந்த்துக்கு தெரியாமல் போயிற்று" என்று மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் பற்றின பெருமையையும் சிலாகித்து கூறியிருக்கிறார்.
Valai Pechu Anthanan யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "சிவாஜி வீடு ஜப்தி என்பதை கேட்கவே பேரதிர்ச்சியாக உள்ளது.. அன்னை இல்லம் வீடு வெளியிலிருந்து பார்ப்பதற்கே தியேட்டர் மாதிரி இருக்கும். சிவாஜி, பிரபுவுக்கு கதை சொல்ல செல்லும் இயக்குனர்கள் அந்த வீட்டை பற்றி பிரமித்து சொல்லுவார்கள்..

பிரம்மாண்டமான வீடு, தேக்கு மரத்தினாலான பொருட்கள், அதன் வேலைப்பாடுகள் அற்புதமாக இருக்கும். வேலைக்காரர்கள் மட்டும் 50 க்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். டைனிங் டேபிள் கால்கள், தந்தத்தினாலேயே செய்யப்பட்டது என்பார்கள். தங்கத் தட்டு, வெள்ளி தட்டுகள் இருக்குமாம்.
சமூக அந்தஸ்துள்ளவர்கள், பணக்காரர்கள்
மிகப்பெரிய பணக்காரர்கள், சமூக அந்தஸ்து உள்ளவர்கள், இந்த அன்னை இல்லம் வீட்டில் விருந்து சாப்பிட்டுள்ளார்கள்.
டாக்டர் மருதுமோகன் என்பவர் சிவாஜியை பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், அன்னை இல்லம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
கும்பகோணம் உலகம் பட்டினம் பொடி என்ற தொழிலதிபரிடமிருந்துதான், இந்த வீட்டை 1960-ல் சிவாஜி வாங்கியிருக்கிறார். ஒன்றரை ஏக்கர் பரப்பரளவில் இந்த வீடு உள்ளது.. 24 கிரவுண்டு கொண்ட இந்த வீட்டை 2 லட்சம் ரூபாய்க்கு அப்போது வாங்கியிருக்கிறார்.
பிரபலங்கள் வாழ்ந்த வீடு
அதற்கு முன்பு, ஜார்ஜ் டவுன்சன் போக் என்பவர் தான் இந்த வீட்டில் குடியிருந்தார்.. இவர் பெயரில்தான் போக் ரோடு உருவானது.. இவர் சென்னை மாகாண தலைமை செயலாளராக இருந்திருக்கிறார்.. இவருக்கு பிறகு, குமார வெங்கட் ரெட்டி என்பவர் இந்த வீட்டில் வாழ்ந்துள்ளார்.. இவர் சென்னை கவர்னராகவே இருந்திருக்கிறார்..
இவர்கள் இருக்கும்போதே நல்ல வசதியுடன்தான் அன்னை இல்லம் இருந்துள்ளது. ஆனாலும், சிவாஜியின் தம்பி சண்முகம், இந்த வீட்டிற்கு 2 வருடமாக இன்டீரியர் வேலைப்பாடுகள் செய்தாராம். சிவாஜியின் பழம்பெருமைகள் அங்கு படமாகவும் இருக்கிறது. புதுக்கோட்டை ராஜாவுடன் சேர்ந்து, வேட்டைக்கு போவாராம் சிவாஜி.. புலியை கொன்று, அதை பாடம் பண்ணி சிவாஜி வீட்டில் வைத்திருக்கிறார்களாம்.
சிறுவன் சிலை ஏன் தெரியுமா
அன்னை இல்லம் வீட்டின் மீது, ஒரு சிறுவன் புத்தகம் படிப்பதுபோல சிலை காணப்படும்.. சிவாஜி கணேசனுக்கு தான் படிக்கவில்லை என்ற வருத்தம் இருந்து கொண்டேயிருந்ததாம். அதனால், சிறுவன் படிப்பது போல சிலை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அவர் விருப்பப்படிதான் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த வீட்டை 3 கோடி ரூபாய் கடனுக்காக ஜப்தி என்பது ஜீரணிக்க முடியவில்லை.. இது சிவாஜியின் பெருமையையே ஜப்தி செய்வது போல இருக்கு. பிரபு சமீபகாலமாகவே நடிப்பதை குறைத்துவிட்டார்.. விக்ரம் பிரபுவுக்கு மார்க்கெட் இல்லை.. ராம்குமாரின் துறையே வேறு.
இது எப்படி சரியாகும்?
அந்தவகையில், வருமானமே இல்லாத சூழலில், அன்னை இல்லம் வீட்டை நிர்வகிப்பதே மிகப்பெரிய கஷ்டமான வேலை.. பல வேலையாட்களும் அங்கிருந்து சொந்த ஊருக்கு போய்விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது, வருமானமே இல்லாதபோது, கடன் வாங்கி படத்தை எடுப்பது எந்த விதத்தில் சரியாகும்? இது எப்படி சினிமாவையே சுவாசித்து வளர்ந்த துஷ்யந்த்துக்கு தெரியாமல் போயிற்று" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications