சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் வடிவேல் பாலாஜியின் குடும்பம்.. "கண்ணீரை" வரவழைத்தவரின் வீட்டு கண்ணீர் கதை
சென்னை: விஜய் டிவி புகழ் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பம் வறுமையில் வாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பாலாஜி. இவர் ஆரம்பத்தில் பெரும்பாலும் வடிவேல் கெட்டப் போட்டு நடித்தார்.
வடிவேலுவை போல் மிமிக்ரி, பாடி லேங்குவேஜ் என இருந்ததால் இவர் வடிவேல் பாலாஜி என அழைக்கப்பட்டார். அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற ரவுண்டில் வடிவேல் பாலாஜியின் காமெடியை பார்த்து பலர் சிரித்து அந்த ரவுண்டில் அவுட் ஆகியுள்ளனர்.

சிவகார்த்திகேயன்
அந்த நிகழ்ச்சியில் முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்தார். அவர் ஏற்கெனவே போட்டியாளர்களுடன் நகைச்சுவையாக பேசி வந்ததால் அந்த நிகழ்ச்சி பிரபலமடைந்தது. போதா குறைக்கு வடிவேல் பாலாஜி சிரிச்சா போச்சு ரவுண்டில் காமெடியில் கலக்கியதால் அந்த நிகழ்ச்சி மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

பெண் கெட்டப்பில் கலக்குவார்
இவர் பெண் கெட்டப்பிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள், அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் என நிறைய பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கண் கலங்கிய நபர்கள்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில அமுதவாணன், வடிவேல் பாலாஜி கெட்டப்பில் வந்த போது அர்ச்சனா, ரோபோ சங்கர், ராமர் உள்ளிட்டோர் கண் கலங்கி, அமுதவாணனை கட்டிப் பிடித்து அழுதனர். வடிவேல் பாலாஜி உயிருடன் இருந்த போதும் அவரது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.

உண்மையை சொல்ல மறுத்த மனைவி
அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு உதவுவதாக கூறியவர்கள் எல்லாம் இன்று உதவ முன்வரவில்லை என்ற தகவலை அறிந்து வடிவேல் பாலாஜியின் மனைவியிடம் தனியார் ஊடகம் பேட்டி எடுக்க சென்றது. ஆனால் அவர் எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டார்.

2 வேலை சாப்பாட்டுக்கு கூட கஷ்டம்
இதையடுத்து அந்த சேனல் அக்கம்பக்கத்தாரிடம் விசாரித்தது. அப்போது அவர்கள், குழந்தைகளுக்கு இரு வேலை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுவதாக என்னிடம் பாலாஜியின் மனைவி சொல்வார். அவரது வீடு ஆங்காங்கே விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகி இரு குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். சின்னத்திரை நடிகர்கள், அவருடன் பணியாற்றியோர் அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்தால் வசதியாக இருக்கும் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். கண்களில் தண்ணீர் வரவழைக்கும் அளவுக்கும் வயிறு வலிக்கும் அளவுக்கும் சிரிக்க வைத்த சின்னத்திரை கலைஞரின் குடும்பத்தின் கண்ணீர் கதை அவரது ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications