அதுதான் எங்க வேலையா? ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்..இந்த வாரம் நீயா நானா அனல் பறக்கும் போலயே!
கணவனை திருத்துவதுதான் எங்க வேலை என்றால் ஏன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்கின்றனர் 2 கே கிட்ஸ் பெண்கள்.
சென்னை: கல்லானாலும் கணவன்..புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்தார் நம்முடைய பாட்டி, அம்மாக்கள். 80களில் பிறந்த பெண்கள் பலரும் வேலைக்கு போக ஆரம்பித்த பின்னர் வீட்டு வேலைகளை சரிபாதியாக பிரித்து செய்ய ஆரம்பித்தனர். தவறு என்றால் தவறுதான் உன் வாழ்க்கையை நீ பார் என் வாழ்க்கையை நான் பார்க்கிறேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர் 90களில் பிறந்த பெண்கள். கணவனை திருத்துவதுதான் எங்கள் வேலையா? என்று கேட்கின்றனர் இன்றைய 2கே கிட்ஸ் பெண் குழந்தைகள். இந்த வார நீயா நானா நிகழ்ச்சியின் புரோமா வெளியாகி சமூக வலைத்தளங்களில் விவாதத்தை பற்ற வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சி நீயா நானா. பல ஆண்டுகாலமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் கோபிநாத். சமூகத்தில் நடக்கும் சில சம்பவங்களை தலைப்புகளாக கொடுத்து இரு அணிகளாக பிரிந்து விவாதம் செய்வார்கள்.
ஒவ்வொருவாரமும் ஞாயிறன்று விவாதிக்கப்படும் கருத்துக்கள் அந்த வாரம் முழுக்க சமூக வலைத்தளங்களில் பேசப்படும். சிலர் ட்ரோல் செய்வார்கள். சிலர் மீம்ஸ்களாக பதிவிடுவார்கள்.

திருமணம் பற்றிய விவாதம்
கடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் எப்படி நடக்க வேண்டும் தனக்கு வரக்கூடிய மணமகன் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்கள் பேசியது அதிகம் பேசுபொருளானது. இன்றைக்கும் கூட மீம்ஸ் கண்டெண்ட்களாக அந்த நீயா நானா நிகழ்ச்சி பேசப்படுகிறது.

பெண்கள் தண்ணியடிக்கக்கூடாதா?
அதேபோல ஆண்கள் மட்டும்தான் மது அருந்த வேண்டுமா? பெண்கள் மது அருந்தக்கூடாதா என்று ஒரு பெண் பேசியது அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. அதுபோல காதல் பற்றியும் திரைப்பட பாடல்கள் பற்றியும் பல தலைப்புகளில் நீயா நானாவில் விவாதிக்கப்படுகிறது.

படிக்காத கணவர்
படித்த பெண்கள் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் படிக்காத கணவரை திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது அந்த நிகழ்ச்சி பல வாரங்களாக பேசப்பட்டது. கணவரைப் பற்றி ஏளனம் செய்த மனைவியை பலரும் திட்டி தீர்த்தனர். அது அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை எகிற வைத்தது.

கணவரை திருத்த வேண்டுமா?
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு கணவரை திருத்தலாம்..திருத்துவது என்னுடைய வேலை இல்லை என்பதுதான் தலைப்பு. ஆணுக்கு திருமணத்திற்கு முன்போ, பின்னரோ பொறுப்புங்கிறது தானா வரணும் என்று சொல்கிறார் ஒரு பெண். அதற்கு ஒரு பெண் எல்லோருக்கும் அது தானாக வராது என்று சொல்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகு கணவரை திருத்தலாம் என்ற கட்சியை சேர்ந்தவர். எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யாவிட்டால் வீடு வீடாக இருக்காது என்று சொல்கிறார்.

ஏன் திருத்த வேண்டும்
எங்க வீட்ல இருந்து கல்யாணம் பண்ணிட்டு வந்து உங்க பிள்ளையை நாங்க திருத்தணுமா என்று கேட்கிறார் இன்றைய காலத்து இளம் பெண். அவர் திருத்துவது என்னுடைய வேலை இல்லை என்ற கட்சியை சேர்ந்தவர். திருத்துவதுதான் வேலை என்றால் கல்யாண வாழ்க்கை என்ன திருத்துவதா என்று கேட்கிறார் அதே கட்சியை சேர்ந்த மற்றொரு பெண். இந்த வாரம் தரமான தலைப்புதான். விவாதம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications