Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாமன்னன்தான்"! ஆனால் பானுப்ரியாவுக்கும் சதாவுக்கும் வித்தியாசம் தெரியாத வடிவேலு! அதான் தோல்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வடிவேலு நடிப்பில் மாமன்னன்தான். ஆனால் அவருடைய வாய், ஆணவம்தான் அவரின் இந்த தோல்விகளுக்கு காரணம். அவரின் சிறப்புகள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் பதிவில் கூறியிருப்பதாவது: இயக்குனர் சேரன் மாமன்னன் பார்த்துவிட்டு சொன்னார். "மாமன்னன் படத்தில் வடிவேலு அமைச்சரிடம் பேசிவிட்டு ஒரு நிமிஷம் இருங்க என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தூரம் தனியே வந்து ஒரு அழுகை அழுவார் பாருங்க. எனக்கு அப்போ பொற்காலம் படத்தில் முரளியின் நண்பனாக வந்து மாப்பிள்ளை வேணும் மாப்பிள்ளை வேணும்னு ஊரெல்லாம் தேடினாயேடா. ஒரு நாளாவாது நீ என் தங்கச்சிய கட்டிக்கிறியான்னு கேட்டியாடான்னு முரளியிடம் ஆதங்கப்படுவார்.

television vadivelu

எனக்கு மாமன்னனின் அந்த அழுகைக் காட்சியில் அந்த பொற்காலம் முரளி நண்பன் கேரக்டர் தான் மனதில் வந்தது. வடிவேலு சிறந்த நடிகர்". சேரனின் இந்த ஸ்டேட்மெண்ட் உண்மை தான். வடிவேலுவின் நடிப்பு உண்மைக்கருகே இருக்கும். அதனாலேயே அவர் காமெடிகள் கூட இன்றும் ரசிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

நடிகனாக எந்த இலக்கணத்திலும் பொருந்தாத முகமும் உடலும் கொண்ட உருவம். அது தான் அன்றைய வடிவேலு. வடிவேலு வந்த புதிதில் காக்காய்க்கு பேண்ட் சட்டை மாட்டியது போலிருப்பார். அப்போது அவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருக்கும். அந்த உடல்வாகோடு அவர் 'கோகுலம்' படத்தில் பானுப்ரியாவோடு டூயட் பாடினார்.

அன்று தியேட்டரெல்லாம் சிரிப்பொலி, கரகோஷம்.
அதே வடிவேலு உடலெல்லாம் மினுமினுப்பாக படுஸ்டைலாக ஆனதும் விக்ரம், மாதவன் போன்ற நடிகர்களின் ஹீரோயின் சதாவோடு டூயட் பாடினார். பானுப்ரியாவோடு எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஆடிய போது ரசித்த மக்கள் சதா என்கிற அழகியோடு ராஜேஷ் கன்னாவின் மேரே சப்னோ கி ராணி பாடலில் நடித்த போது குழம்பி போனார்கள்.

இது சிரிப்புக் காட்சியா?..ஹீரோ ஹீரோயின் காதல் காட்சியா? படு குழப்பம்... எலி என்கிற அப்படம் படு தோல்வி. வடிவேலுவின் இரண்டு பரிமாணங்கள். இதன் வித்தியாசத்தை வடிவேலு உணர்ந்திருந்தால் இந்த தோல்வி அவருக்கு நிகழ்ந்திருக்காது. அன்று கோகுலம் படத்தில் வடிவேலு சிரிப்பு நடிகன். இன்று வடிவேலுவின் எலி ஹீரோயிஸத்தை யாரும் ரசிக்க முன்வரவில்லை.

television vadivelu

நாயகனாக வடிவேலுவை தோல்வியுற செய்தது நல்லதே. இல்லையென்றால் தமிழனின் திரை ரசிப்புத்தன்மை மற்ற மாநிலத்தவரால் விமர்சிக்கப்பட்டிருக்கும். காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன், முத்துராமன் என இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் நாகேஷின் போர்ஷன்களை நீக்கிவிட்டு யோசித்து பாருங்கள். அது வெற்றி பெற்றிருக்குமா என்றே தோன்றும்.

எல்லா நகைச்சுவை நடிகர்களும் சில விஷயங்களால் மறைந்து போவார்கள். சந்திரபாபு, சுருளி, நாகேஷ் போன்றோருக்கு குடிப்பழக்கம் சத்ருவாக இருந்தது. வடிவேலுவுக்கு தான் என்கிற ஆணவம் தான் அந்த குடிப்பழக்கம். தனக்காகத்தான் படம் ஓடுகிறது என்கிற நினைப்பு வரை சரி. ஆனால் அதன் ரியாக்ஷன்களை நடிகர்கள் காட்டத் தொடங்கும் போது தோல்வி தொடங்குகிறது.

வாயால் வென்றவர் கவுண்டமணி. வாயால் தோற்றவர் வடிவேலு. வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது வாய் தான். ராஜ்கிரண், கவுண்டமணி வரமாட்டார் என நினைத்து ஷுட்டிங்குக்கு முதல் நாள் வடிவேலுவை வரவழைத்திருக்கிறார் மதுரையிலிருந்து. வடிவேலு நடிக்க மதுரையிலிருந்து வந்துவிட, கவுண்டமணியும் வந்து விட, ராஜ்கிரண் சரி... வந்துவிட்ட வடிவேலுவுக்கு ஒரு சீன் கொடுப்போம் என கொடுத்தது ஒரே ஒரு காட்சி.

கவுண்டமணியை பார்த்து சௌக்கியமா என வடிவேலு கேட்க வேண்டும். கவுண்டமணி வடிவேலுவை உதைக்க தொடங்குவார். கேட்கமாட்டேண்ணே என்கிற டயலாகை வடிவேலு சொல்ல வேண்டும். ஆனால் வடிவேலு 'அண்ணே படாத இடத்தில் பட்டுட போவுதுண்ணே..' என தானாக பேசிய வாய் தான் இன்னும் சில காட்சிகளுக்கான வசனங்களை ராஜ்கிரணிடமிருந்து பெற்று தந்தது.

television vadivelu

மேலும் ராஜ்கிரண் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. வாய் வாய்ப்பு தான் வாங்கித்தரும். முதலமைச்சரையெல்லாம் தீர்மானிக்க முடியாது என்பதை புரியாத வடிவேலு. வடிவேலு 'கவுண்டர் மணி'யாக நினைத்ததன் விளைவே அவரின் இன்றைய தோல்வி. வடிவேலுவிடம் இப்போது வேறொரு பாதை இருக்கிறது. குணச்சித்திர வேடம். அதில் வடிவேலு பயணிக்கலாம். மாமன்னன் பாத்திரம் அவருக்கு அளவெடுத்து தைத்த சட்டை போல் பொருந்தியது.

'பதினாறு வயதினிலே' படத்தை முதலில் நாயகனாக நாகேஷை வைத்து எடுக்க நினைத்தார்களாம். அது போல துள்ளாத மனமும் துள்ளும் படம் வடிவேலுவை நினைத்து தான் முதலில் எழுதப்பட்டதாம். இரண்டு படங்களுமே பின்னாளில் வேறு நடிகர்கள் நடித்தாலும் அந்த சிந்தனை சரி தான் என நமக்குத் தோன்றுகிறதல்லவா?

அது தான் அந்த நடிகர்களின் வெற்றி. படம் முழுக்க சார்லி சாப்ளின் நம்மை சிரிக்க வைத்தாலும் ஒரே ஒரு காட்சியில் நம் மனதை இளக வைத்துவிடுவார். அப்படி ஒரு நடிப்புத்திறன். அது நாகேஷுக்கு பிறகு வடிவேலுவிடம் இருக்கிறது. இனி அவர் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+