ரூ.20 கோடி.. தட்டி தூக்க போற அதிர்ஷ்டசாலி யாரோ? கிறிஸ்துமஸ் - நியூ இயர் லாட்டரி அறிவித்தது கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது. தற்போது பூஜா பம்பர் லாட்டரி சீட்டு விற்பனை முடிந்து நடந்த குலுக்கலில் ரூ.12 கோடி பரிசை கருணாகப்பள்ளியை சேர்ந்தவர் தட்டி சென்றார். தற்போது ரூ.20 கோடிக்கான கிறிஸ்துமஸ் - நியூ இயர் லாட்டரி லாட்டரி விற்பனை தொடங்க உள்ளது. இதனால் ரூ.20 கோடியை தட்டி செல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. புதன் கிழமைகளில் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டும் இதர நாட்களில் ரூ.75 லட்சம் பரிசுத்தொகை கொண்ட லாட்டரி விற்பனையும் நடைபெறுகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை ரூ.40 ஆகும். இதுபோக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி விற்பனையும் நடைபெறுகிறது.

ஓணம் பம்பர், பூஜா பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர் என 6 பம்பர் குலுக்கல்களும் நடைபெறுகிறது. இதில், ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அதிக பரிசுத்தொகை கொண்டது கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரிதான். இதற்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்படுகிறது.
கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் கொல்லம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கிய கேரளாவின் கருணாகப்பள்ளி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் முதல் பரிசாக ரூ.12 கோடி வென்றார். பூஜா பம்பர் குலுக்கல் முடிந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் நியூஇயர் பம்பர் டிக்கெட்டினை கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்த டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அடிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 10 சீரியஸ்களில் இந்த டிக்கெட் அச்சிடப்படும். முதல் பரிசாக ரூ.20 கோடியும். இரண்டவாது பரிசாக 20 டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும். மூன்றவாது பரிசாக ரூ.25 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும். பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.90.88 கோடி வழங்கப்பட உள்ளது.
லாட்டரி டிக்கெட்டுகளை பொறுத்தவரை ஒரு சிலரை பணக்காரர் ஆக்கிவிட்டு பலரை பொருளாதார இழப்புக்கு உள்ளாகிவிடுகிறது. இதனால், ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்களே என்பதே நிதர்சனமான உண்மை என்பது லாட்டரி பிரியர்களின் கருத்தாக உள்ளது.
இதனால், தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் லாட்டரி விற்பனை என்பது சட்ட விரோத செயல் ஆகும். கள்ளச்சந்தையில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு கேரள அரசு பரிசுத்தொகையும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications