ரியல் கேரளா ஸ்டோரி! சவுதியில் சிக்கிய உயிரை காப்பாற்ற.. ரூ.34 கோடி பணம் திரட்டிய மலையாள மக்கள்
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் வேலைக்கு சென்று, தெரியாமல் நடந்த சிறு தவறால் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டணை பெற இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபரை, ரூ.34 கோடி கிரவுட் ஃபண்ட் திரட்டி அதன் மூலம் அவரை அம்மாநில மக்கள் மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர், சவுதிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து தனது 26 வயதில் சவுதிக்கு சென்றார். அங்கு மாற்றுத்திறனாளியான 15 வயது சிறுவனின் குடும்பத்தினர், ரஹீமுக்கு டிரைவராக வேலை கொடுக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் உள்ள சிறுவனை பொறுத்த வரை, அவரால் தானாக உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அவரது கழுத்தில் மருத்துவ கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதுதான் அவர் சாப்பிடுவதற்கும், சுவாசிப்பதற்கும் உதவும்.

ஆனால், எதிர்பாராத விதமாக தவறுதலாக ரஹீம் அதை கழற்றிவிடுகிறார். இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அக்கருவியை மீண்டும் பொருத்த முயற்சிக்கும்போது சிறுவன் உயிரிழந்துவிடுகிறார். அவ்வளவுதான் ரஹீமின் வாழ்க்கை சூனியமாகிறது. அவர் மீது கொலைப்பழி சுமத்தப்படுகிறது. அந்நாட்டின் சட்டத்தின்படி சவுதி பிரஜையை கொல்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். ரஹீமுக்கும் இதே தண்டனை கொடுக்கப்படுகிறது.
இங்கு கேரளாவில், இவரது மனைவியும், மகனும் ரஹீம் அனுப்பும் பணத்திற்காக காத்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் இடிந்து போய்விடுகின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதுதான் ரஹீமின் நண்பர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி தேற்றுகிறார்கள். அவர்கள் இங்கிருந்தபடியே ரஹீமை மேல் முறையீடு செய்ய அறிவுறுத்துகிறார்கள். ரஹீமும் அவ்வாறே செய்கிறார். மேல் முறையீட்டில் இவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அப்போது சிறுவனின் குடும்பம் ஓர் உடன்படிக்கைக்கு வருகிறது. அதாவது, சிறுவனின் மரணத்திற்கு ஈடாக 15 மில்லியன் ரியால் கொடுத்தால், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவிக்கிறது. 15 மில்லியன் ரியால் என்பது ரூ.34 கோடியாகும். இதற்கான ஒப்பந்தம் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி கையெழுத்தாகிறது. இந்த உடன்படிக்கை 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதியுடன் முடிவடைந்துவிடும். அதற்குள் பணத்தை திரட்டி கொடுக்க வேண்டும்.
தங்களது நண்பர்களை காப்பாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை புரிந்துக்கொண்ட ரஹீமின் நண்பர்கள் கிரவுட் ஃபண்ட்-ஐ தொடங்குகிறார்கள். கேரளா முழுவதும் அவர்கள் பணத்தை வசூலிக்கிறார்கள். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், சோஷியல் மீடியா பிரபலங்கள், சவுதியில் வேலை செய்யும் கேரள மக்கள் என அனைத்து பக்கங்களிலிருந்தும் பணம் திரட்டப்படுகிறது.
இறுதியாக ஏப்ரல் 16க்கு முன்னதாகவே இவர்கள் பணத்தை திரட்டி முடித்துள்ளனர். இதன் மூலம் ரஹீமின் விடுதலை சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "இதுதான் உண்மையான 'கேரளா ஸ்டோரி'. கேரளாவை வைத்து ஏராளமான வெறுப்பு பிரசாரங்கள் நடத்தப்படுகிறது. ஆனால், இப்போது நடந்த சம்பவம் மலையாளிகளின் மனம் எப்படியானது என்பதை விளக்குகிறது. இந்த மனிதாபிமான உதவிக்காக கைகோர்த்து நின்ற அனைவருக்கும் நன்றி. ஒற்றுமை, இரக்கம் மற்றும் உண்மை என கேரளாவின் நிஜக்கதையை தொடர்ந்து ஷேர் செய்வோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், "வெறுப்பையும் பிரிவினையையும் பரப்பும் வகுப்புவாத அரசியலை பயன்படுத்திக் கொள்ள முயல்பவர்களுக்கு மலையாளிகள் திரட்டும் பணம்தான் பதில். இதுதான் கேரளாவின் உண்மையானக் கதை. கேரளாதான் முன்னுதாரணம்" என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரசாரத்தை கக்கி இருந்ததாக இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சம்பவம்தான் உண்மையான கேரளா ஸ்டோரி என்று அவர்கள் கூற தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications