"செல்போனை கொடுக்காட்டி கொன்றுவேன்".. தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்.. பாலக்காட்டில் பரபரப்பு
திருவனந்தபுரம்: பாலக்காடு மாவட்டம், அனக்கரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவன் செல்போனை கொடுக்காவிட்டால் வெளியே வரும்போது கொன்று விடுவேன் என்று தலைமை ஆசிரியருக்கு மிரட்டல் விடுக்கும் மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக இன்றைய சமூகத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமுமே செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களுக்குத் தெரியாமல் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பாலக்காடு அனக்கரா பகுதியில் வகுப்பில் மாணவர் ஒருவர் செல்போன் பயன்படுத்திய நிலையில், ஆசிரியர் அதனைப் பறித்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர் செல்போனை கொடுக்காவிட்டால் வெளியே வரும்போது கொன்று விடுவேன் என்று தலைமை ஆசிரியரேயே மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அனக்கரா பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்ற விதிமுறை அனைத்துப் பள்ளிகளுக்குமே உள்ளது. அதேபோல, அனக்கரா பள்ளியிலும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனக்கரா பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் பள்ளிக்கு செல்போனை கொண்டு வந்து பயன்படுத்தியுள்ளார். இதனைப் பார்த்த வகுப்பு ஆசிரியர் அந்த மாணவரிடம் பள்ளிக்கு செல்போன் கொண்டு வரக் கூடாது என்று அறுவுறுத்தியுள்ளார். ஆனால், அந்த மாணவன் மீண்டும் செல்போனை கொண்டு வந்து வகுப்பில் பயன்படுத்தியுள்ளார்.
இதைப் பார்த்த ஆசிரியர் மாணவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர் அந்த ஆசிரியரிடம் செல்போனை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த ஆசிரியர் செல்போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால், கடும் கோபமடைந்த அந்த மாணவன், நேராக தலைமை ஆசிரியரின் அறைக்கு வேகமாகச் சென்றுள்ளார். பின்னர், தோரணையாக இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனை கேட்டு சப்தம் போட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து மாணவன் செல்போனை கேட்டு ஆக்ரேஷமாக கத்திக் கொண்டே இருந்த நிலையில், தலைமை ஆசிரியர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன் என் செல்போனை திருப்பி தராவிட்டால் பள்ளியை விட்டு வெளியே வரும்போது கொன்று விடுவேன் என்று எல்லோர் முன்பும் தைரியமாக மிரட்டிவிட்டு அறையில் இருந்து வேகமாக கிளம்பியுள்ளார்.
மாணவர் கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அவருடைய எதிர்காலம் கருதி காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் புகார் அளிக்காமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். மாணவன் தலைமை ஆசிரியரை மிரட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications