தமிழகத்தை போல்.. கேரளா ஆளுநர் உரையிலும் பிரச்சனை.. மத்திய அரசுக்கு எதிரான பத்திகளை படிக்காத கவர்னர்
திருவனந்தபுரம்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தேசியகீதத்துடன் தொடங்கப்படவில்லை என ஆளுநர் ஆர்என் ரவி இன்று தனது ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா சட்டசபை கூட்டத்தொடரிலும் மத்திய அரசுக்கு எதிரான பத்திகளை ஆளுநர் ராஜேந்தரி விஸ்வநாத் அர்லேகர் படிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அப்போது ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் அரசின் சாதனைகள் குறித்த விஷயங்களை உரையாக வாசிப்பார்.

அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த வேளையில் மாநில ஆளுநராக இருப்போர் குறிப்பிட்ட அரசின் சாதனைகள் குறித்த விஷயங்களை உரையாக வாசிப்பார்.
அந்த வகையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையாற்ற வந்தார். ஆனால் வழக்கம்போல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கீதத்துடன் கூட்டத்தொடரை தொடங்க வலியுறுத்தி வருகிறார். இதனை தமிழக அரசு இன்றும் ஏற்கவில்லை. இதனால் ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் உரை நிகழ்த்த மறுத்து வெளியேறினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை முழுவதுமாக வாசித்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் கேரளாவிலும் ஆளுநர் உரை சர்ச்சையாகி உள்ளது. கேரளாவிலும் 2026ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற சட்டசபைக்கு வந்தார். அதன்பிறகு அவர் அரசு தயாரித்த உரையை வாசித்தார். அப்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சில பத்திகளின் வார்த்தைகளை படிக்காமல் கடந்து சென்றார். மேலும் சில இடங்களில் அவரே புதிய வார்த்தைகளை சேர்த்து படித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மத்திய அரசுக்கு எதிரான வரிகளை படிக்காமல் கடந்து சென்றார். அதன்படி 12வது பத்தியில், மத்திய அரசு நிதி கூட்டாச்சி தொடர்பான அரசியலமைப்பு கொள்கைகளை பலவீலப்படுத்திவருகிறது. இதனால் கேரளா நிதி சிக்கலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டு இருப்பதை அவர் புறக்கணித்தார். அதேபோல், 15வது பத்தியில், ‛‛மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தி தொடரப்பட்ட வழக்கு தொடர்பான வார்த்தைகளை அவர் படிக்க மறுத்துள்ளார்.
அதேபோல், 16வது பத்தியில் மாநிலங்களுக்கான வரிப் பங்கு மற்றும் நிதிக் கமிஷன் மானியங்கள் அரசியலமைப்பு உரிமைகள் தான். இது தாராளம் காட்டும் செயல்கள் அல்ல என்று கூறப்பட்டு இருப்பதையும் அவர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் அரசியலமைப்பின் 176வது பிரிவை சுட்டிக்காட்டி, ஆளுநரின் உரை அரசின் கொள்கை நிலைப்பாட்டையே பிரதிபலிக்கிறது. இதனால் ஆளுநர் உரை புத்தகத்தில் இடம்பெற்ற அனைத்தும் அப்படியே அவை குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications