வாட்டர் பைப்புகளில் லஞ்ச பணத்தை பார்த்திருப்பீங்க! கேரளாவில் இது என்ன புது டெக்னிக்கா இருக்கே?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனை செய்த போது வாழை மரத்தில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கொட்டியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக- கேரளா எல்லையில் உள்ளது பாலக்காடு மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடுபுனி என்ற சோதனை சாவடி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வரும் வாகனங்களை சோதனை சாவடியில் சோதனை செய்து அனுப்புவது வழக்கம்.

மேலும் பசுவதைக்காக பசுக்களை கடத்தி செல்லும் கும்பலை பிடிப்பதற்காகவும் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தினந்தோறும் இந்த வாகன தணிக்கையானது நடைபெறுகிறது.
அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நடுபுனி சோதனை சாவடியில் சோதனை செய்து கொண்டிருந்த போது போலீஸாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் யாரோ மர்ம நபர்கள் லஞ்ச பணத்துடன் அந்த வழியாக வாகனத்தில் வருவதாக தகவல் கிடைத்தது.
இதை வைத்து போலீஸார் அலர்ட்டாக இருந்தனர். அப்போது ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பார்த்தால் வாழை மரங்களை கேரளாவிற்குள் கொண்டு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. சினிமாவில் பார்ப்பது போல் வாழை மரம்தானே போகிறது, பணம் ஏதும் இல்லையே என போலீஸார் கருதினர்.
வாழை மரங்களுக்கு கீழே ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனை செய்தனர். அது போல் எதுவும் இருக்கிறதா என பார்த்த போது ஒன்றும் இல்லை. சரி என அந்த செக்போஸ்ட்டை போலீஸார் திறந்துவிட முயற்சித்தனர். அப்போது திடீரென அவர்களுக்கு சந்தேகம் வலுத்தது. உடனே வாகனத்தில் உள்ள வாழை மரங்களை ஒவ்வொன்றாக எடுத்து சோதனை செய்ய முயற்சித்தனர்.
அப்போது ஒரு மரத்தை எடுத்து பார்க்கும் போது அதில் பணம் சுருட்டப்பட்டு பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது போல் மற்ற மரங்களை சோதனை செய்த போது கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. எல்லாமே 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளாகவே இருந்தன. வாழை மரத்தின் கிளை பிரியும் போது ஏற்படும் ஒரு கேப்பில் பணத்தை வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது.
இதை பார்த்த அதிகாரிகளுக்கு நூதனமாக இருக்கே என்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பணத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் லைவ் ஸ்டாக் உதவியாளர் விஜயகுமாரும், இன்ஸ்பெக்டர் ஷாஜி, ஃபீல்டு ஆபிசர் அசோகன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சத்தை பெற்று, அதை வாழை மரத்தில் ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அது போல் கேரள எல்லையில் இருக்கும் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு சொந்தமான செக் போஸ்ட்டிலும் சோதனை நடந்தது. அதில் கணக்கில் வராத ரூ 16,180 பணம் புலியரா செக் போஸ்ட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. அப்போது 15 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது வெளியானது. பொதுப்பணித் துறை பொறியாளர் சாந்தா கவுடாவுக்கு சொந்தமான வீட்டில் உள்ள தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரூ 25 லட்சம் ரொக்கத்தையும் பல கிலோ தங்க நகைகளையும் போலீஸார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications