கிறிஸ்துமஸ் பம்பர்: கேரள அரசு எடுத்த முடிவு! வீணடிக்கப்பட்ட 12 லட்சம் லாட்டரிகள்.. என்னங்க நடக்குது?
திருவனந்தபுரம்: கேரளாவில் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட் கடந்த 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னமும் விற்பனை தொடங்கவில்லை. அதுமட்டும் இன்றி அச்சிடப்பட்ட 12 லட்சம் டிக்கெட்டுகளையும் கேரள அரசு கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம்.. இதற்கு என்ன காரணம்? என்று பார்ப்போம்.
கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அரசு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. அங்கு தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. அதுபோக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த லாட்டரிகளுக்கு பல கோடிகளில் முதல் பரிசு வழங்கப்படும். குறிப்பாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசு ரூ.25 கோடியாக உள்ளது.

அதேபோல, கிறிஸ்துமஸ் - நியூ இயர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி அளிக்கப்படுகிறது. கேரள லாட்டரிகளில் முதல் பரிசுத்தொகை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்பதால் கேரளாவிற்கு செல்லும் வெளி மாநிலத்தவர்கள் ஆர்வத்துடன் லாட்டரி டிக்கெட் வாங்கி செல்கிறார்கள். பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கேரளாவை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்தது.
பூஜா பம்பர் குலுக்கல் நடைபெற்ற அன்றே கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி அறிவிக்கப்பட்டது. ரூ.400 மதிப்பு கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு 20 கோடி முதல் பரிசாகும். 5 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க இருந்த நிலையில், இந்த முறை கிறிஸ்மஸ் லாட்டரியில் பரிசுத்தொகையை ரூ.9.31 கோடியை அரசு குறைத்தது. அதாவது மொத்த பரிசுத்தொகையில் ரூ.5 ஆயிரம், ரூ, 2 ஆயிரம், ஆயிரம் பரிசுத்தொகை வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
அதேபோல, ஏஜெண்ட் கமிஷனும் 93.16 லட்சம் குறைக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 9 கோடியாகும். பரிசுத்தொகை முறையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு லாட்டரி ஏஜெண்டுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. லாட்டரி ஏஜெண்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரிசுத்தொகையை குறைக்கும் முடிவை கைவிட்டது. இதனால், குறைக்கப்பட்ட பரிசுத்தொகையுடன் அச்சடிக்கப்பட்ட 12 லட்சம் டிக்கெட்டுகளை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் புதிய லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரிகள் அறிவித்து ஒருவாரத்திற்கு மேலாகியும் இன்னும், விற்பனைக்கு டிக்கெட் வரவில்லை. தற்போது சபரி மலை சீசன் என்பதால், டிக்கெட் விற்பனை களை கட்டும். ஆனால், இன்னமும் டிக்கெட்டுகள் கடைகளில் விற்பனைக்க்கு வரவில்லை என்பதால், கேரள அரசுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்றும் கேரள லாட்டரி ஏஜெண்டுகள் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள கேரள அரசு, இன்னும் ஓரிரு நாட்களில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்படும் என்றும் வழக்கமான எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் விற்பனை எட்டி விடும் என்றும் கூறியுள்ளது. கேரளா கிறிஸ்துமஸ்- நியூ இயர் லாட்டரி டிக்கெட்டுகள் மொத்தம் 10 சீரியஸ்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன. 90 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனைக்கு விட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications