பிரபல இயக்குனர் வீட்டில் கொள்ளை.. ரூ.1 கோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள் அள்ளிச்சென்ற கும்பல்.. ஷாக்
திருவனந்தபுரம்: பிரபல திரைப்பட இயக்குனர் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் தங்க, வைர நகைகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் ஜோஷி. பிரபல திரைப்பட இயக்குனர். இவர் நடிகர் மம்முட்டியின் ஆ ராத்திரி திரைப்படத்தை இயக்கினார். மலையாள சினிமாவில் ஒரு படம் ரூ.1 கோடிக்கு மேல் முதல் முதலில் வசூல் செய்தது என்றால் அது இந்த படம் தான். இதுதவிர பல முன்னணி நடிகர்களின் படத்தை ஜோஷி இயக்கி உள்ளார்.

இந்நிலையில் தான் ஜோஷி தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள பனம்பிள்ளி நகரில் வசித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு ஜோஷி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்க சென்றார். இன்று காலையில் கண்விழித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டில் பல அறைகளில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ, அலமாரிகள் திறந்து கிடந்தன. அதோடு அதில் இருந்த வைர, தங்க நகைகள் ரொக்கப்பணம், வாட்ச் உள்ளிட்டவை மாயமாகி இருந்தன. யாரோ மர்மநபர்கள் இரவில் வீட்டுக்குள் நுழைந்து தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுபற்றி ஜோஷியின் மகன் அபிலாஷ் சார்பில் எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் முகத்தில் துணிக்கட்டிக்கொண்டு ஒரு கும்பல் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் என்ட்ரியாவதும், அதன்பிறகு அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.
இதுபற்றி எர்ணாகுளம் துணை போலீஸ் கமிஷனர் ராஜ்குமார் கூறுகையில், ‛‛வீட்டு சமையலறையில் உள்ள ஜன்னல் வழியாக நுழைந்த கும்பல் கொள்ளையடித்துள்ளது. முதல் தளத்தில் உள்ள பெட்ரூம் மற்றம் அறைகளில் உள்ள பொருட்களை அள்ளி சென்றுள்ளனர்'' என்றார். மேலும் போலீசார் கூறுகையில், ‛‛வீட்டில் இருந்து ஒரு வைர நெக்லஸ், 10 வைர மோதிரம், 12 வைர கம்மல், 2 தங்க மோதிரம், 10 தங்க செயின், 10 தங்க வளையல்கள், விலையுயர்ந்த 10 கைக்கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியாகும்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்த பார்த்தால் மிகச்சரியாக திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதோடு ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதோடு வெளிமாநில கொள்ளையர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம்'' என்றார்.











Click it and Unblock the Notifications