தேர்தல் நேரத்தில்... இலவச தடுப்பூசி அறிவிப்பு ஏன்... பினராயி விஜயனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
திருவனந்தபுரம்: கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் தெரிவித்தார். இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி பின்ராயி விஜயனுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் வாக்குகளை பெறுவதற்காக பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில்தான் பினராயி விஜயனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த வாரம் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறுகையில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும். மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது என்றார்.
கேரள மாநிலத்த்தில் 3-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் திங்கள்கிழமை நடக்க இருந்த நிலையில் கரோனா தடுப்பூசி இலவசம் என்று பினராயி அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த பினராயி விஜயன், மாநிலத்தில் கொரோனாவுக்கு அரசு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கிறது. அதேபோல கரோனா தடுப்பூசியும் இலவசமாக வழங்கும் என கூறி இருந்தேன். இதில் என்ன விதிமுறை மீறல் இருக்கிறது என தெரிவித்தார். இந்த நிலையில் இலவச தடுப்பூசி அறிவிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள மாநில தேர்தல் ஆணையம் பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசம்... பினராயி விஜயனின் கெத்தான அறிவிப்பு!
இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத் தரப்பு கூறுகையில் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் 3-வது கட்டத் தேர்தல் முடியாத நிலையில், எந்த சூழலில் கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டீர்கள் என விளக்கம் கேட்டு பினராயி விஜயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறியுள்ளது.