ஜாய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ.305 கோடி சொத்துகள் முடக்கம்.. ரெய்டை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிரடி!
ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சொத்துகளை அதிரடியாக முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
திருவனந்தபுரம் : ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ரூ.305 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸின் ரூ.305 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக ஜாய் அலுக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின் அடிப்படையில், ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜாய் ஆலுக்காஸ் ரெய்டு
கடந்த பிப்ரவரி 22 அன்று கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைமையகம் மற்றும் திருச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் வர்கீஸின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சொத்துகள் முடக்கம்
இந்த சோதனைகளைத் தொடர்ந்து, ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 305 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் ஆகிய 33 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவை ரூ.81.54 கோடி மதிப்பு கொண்டவை. ரூ.217.81 கோடி மதிப்புள்ள ஜோய் ஆலுக்காஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 91.22 லட்சம் வைப்புத்தொகை கொண்ட மூன்று வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஹவாலா
மேலும் ரூ.5.58 கோடி மதிப்புள்ள மூன்று எஃப்.டி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக மொத்தம் 305.84 கோடி மதிப்புள்ள சொத்துகள், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 37A இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் இந்தியாவில் இருந்து துபாய்க்கு பெரும் தொகையை மாற்றியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

துபாயில் முதலீடு
ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸுக்கு சொந்தமாக துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரியில், பல கோடி மதிப்பிலான பணம் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி நடத்திய ரெய்டில் அதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications