Jayaram: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர்.. கிடுக்கிப்பிடி விசாரணை
திருவனந்தபுரம்: கேரள சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறை ஒருபுறம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று நடிகர் ஜெயராம் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். அப்போது அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்தக் கோயிலில், துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய எஸ்.ஐடி பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.
ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்
புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் தங்க தகடுகள் வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின. இதையடுத்து ஜெயராமிடம் எஸ்.ஐ.டி பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்தது. இதையடுத்து, ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
நேரில் ஆஜராகி விளக்கம்
இந்த சம்மனை ஏற்று ஜெயராம் இன்று கொச்சி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம், "இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவரட்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் உண்மையை வெளியில் கொண்டு வருவது ஒவ்வொரு மலையாள மக்களின் கடமையாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications