கேரளாவில் வீடு புகுந்து பெண் போலீஸை வெட்டிக்கொன்ற கணவன்.. தடுக்க வந்த மாமனார் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த திவ்யஸ்ரீ என்ற காவலரை அவரது கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குடும்பத்தகராறு காணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா காவல் நிலையத்தில் காவலராக 34 வயதாகும் திவ்யஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் ராஜேஷ் (38). இவர் டிரைவர் ஆவார். இவர்களது மகன் ஆஷிஷ்க்கு 12 வயது ஆகிறது. இதில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். திவ்யஸ்ரீ தனது தந்தை வாசு வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில் நேற்று ராஜேஷ் கருவெள்ளூர் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திவ்யஸ்ரீயிடம் மீண்டும் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். அதை தடுக்க முயன்ற வாசுவுக்கும் வெட்டு விழுந்தது. அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தகவல் அறிந்த சந்தேரா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, திவ்யஸ்ரீ இறந்து கிடந்தார். படுகாயம் அடைந்த திவ்யஸ்ரீயின் தந்தை வாசுவை மீட்டு கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் திவ்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு மருத்துவனையில் அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக திவ்யஸ்ரீ தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததும், இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தனது மனைவியை வெட்டி கொலை செய்ததும் தெரியவந்தது.
மனைவியை கொன்றுவிட்டு தப்பியோடிய ராஜேஷை போலீசார் தேடி பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.காசர்கோடு பகுதியில் குடும்ப தகராறில் பெண் போலீஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications