ரூல்ஸ் மாறுது.. சபரிமலையில் இறந்தால் இன்சூரன்ஸ்.. ஆன்லைன் பக்தர்களிடம் ரூ.10 வசூல்: தேவசம் போர்டு
திருவனந்தபுரம்: சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமல் செய்வது குறித்து தேவசம்போர்டு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இது உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.. அதிலும், விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வாடிக்கையாகும்.

சபரிமலை: இப்படி சபரிமலை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பம்பை-சன்னிதானம் பாதையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.. இந்த பாதைகள் பெரும்பாலும் காட்டுக்குள்தான் அமைந்துள்ளன.. இதில் செங்குத்தான ஏற்றம், பள்ளம் நிறைந்து காணப்படுவதுடன், கரடுமுரடான பாதையாகவும் உள்ளது... இதன்காரணமாக பக்தர்கள், சபரிமலையின் அடிவாரமான பம்பை வரை வாகனத்தில் வந்து பிறகு சந்நிதானத்துக்கு சுமார் 7கிமீ. மலைச்சாலையில் ஏறி செல்கிறார்கள்.
உடல்நலம் குன்றியோர், நடுத்தர வயதினருக்கு இதெல்லாம் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. பக்திபரவசத்துடன் நடந்து செல்வதால், சிரமங்கள் பெரிதாக தெரிவதில்லை என்றாலும், ஒவ்வொரு வருடமும் பக்தர்களுக்கு சுவாசம் மற்றும் இதயப்பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வருடம் மட்டும் மண்டல காலத்தில் இதுவரை 19 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இன்சூரன்ஸ்: இதுபோன்ற நிலைமையை தவிர்க்க, ஆட்டோமேட்டிக் எக்ஸ்டெர்னல் டிபைபிரிலேட்டர் (ஏஇடி) என்ற இதய தற்காப்பு முதலுதவி கருவிகளை பம்பை முதல் அப்பாச்சி மேடு வரை உள்ள அவசர உதவி மருத்துவ மையங்களில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது... அதேபோல, தற்போது சபரிமலையில் செல்லும் வழியில் சாலை விபத்துகளில் மரணமடையும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் மரணமடைபவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் கிடைக்காது..
இப்படிப்பட்ட சூழலில், வரும் ஆண்டு முதல் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணத்திற்கும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேவசம்போர்டு: இதுகுறித்து அவர் கூறும்போது, "கடந்த ஆண்டில் மலையேறும் போது இதய பாதிப்பினால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.. எனவே, அடுத்த வருடம் முதல் ஆன்லைன் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து ரூ.10 கட்டணமாக வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தக்கட்டணம் கட்டாயம் கிடையாது. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் செலுத்தினால் போதும். வருடத்திற்கு 60 லட்சம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்கிறார்கள்.. இவர்கள் அனைவரும் ரூ.10 செலுத்தினாலே ரூ.6 கோடி வரை கிடைக்கும். இந்தத்தொகையிலிருந்து பக்தர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்க முடியும்" என்றார்.
பேருதவி: ஆன்லைன் பக்தர்கள் மூலம் தலா ரூ.10 வீதம் விருப்ப நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழக்கும் பக்தர்கள் குடும்பத்துக்கு இந்த இழப்பீடு திட்டம் பேருதவியாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. தரிசனத்துக்காக வந்த இடத்தில் மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தேவசம்போர்டில் இருந்து ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று கேரள அரசு, கடந்த மாதம் அறிவிப்பினை வெளியிட்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications